கொல்கத்தா : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 வது சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்து இருக்கிறார். இது குறித்து விராட் கோலியை பாராட்டிய ரவி சாஸ்திரி சச்சினின் சாதனையை சமன் செய்து இருப்பதன் மூலம் விராட் கோலிக்கு தன் மீது இருந்த மிகப்பெரிய சுமை குறைந்திருக்கும் என்று கூறினார். தற்போது 49 சதம் அடித்த பிறகு விராட் கோலி தன்னுடைய எடை 25 கிலோ குறைந்து இருப்பது போல் உணர்வார். இது நிச்சயம் பாராட்டக் கூடியது.
நம் நாட்டில் எப்போதுமே ரசிகர்கள் ரெக்கார்ட்ஸ் மற்றும் சதம் மீது அவ்வளவு ஆர்வத்துடன் இருப்பார்கள். இந்த வழக்கத்தை சதம் அடித்து ஆரம்பித்து வைத்தவர் கவாஸ்கர் தான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 34 ஆவது சதத்தை எடுக்கும்போது இப்படித்தான் சிரமப்பட்டார். அது அவருக்கு எளிதான காரியமாக அமையவில்லை.
பல தூங்கா இரவுகளை சச்சின் டெண்டுல்கர் அளித்தார். தொடர்ந்து 70 ரன்கள் மற்றும் 80 ரன்கள் இருக்கும்போது ஆட்டம் இழப்பார். விராட் கோலி எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாரோ அதேபோல் தான் சச்சின் டெண்டுல்கர் கவாஸ்கரை முந்துவதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தன்னுடைய இன்னிங்சை அற்புதமாக கணித்து கட்டமைத்தார்.
முதலில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய அவர் பந்து பழையதாக மாறியவுடன் அதனை கணித்து விளையாட மிகவும் சிரமப்பட்டார். இருப்பினும் இந்த நெருக்கடியை அற்புதமாக கையாண்ட விராட் கோலி,ஆடுகளத்தில் சிறிது நேரம் செலவழித்து பின்னர் சதத்தை கடந்தார். விராட் கோலி போன்ற வீரர்கள் எல்லாம் எப்படி ரன் அடிக்கலாம் என்று பார்ப்பார்கள்.
ஒரு ரன் அடிக்கும் இடத்தில் அதனை எப்படி இரண்டாக மாற்றலாம் என்று யோசிப்பார்கள். நீங்கள் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை எல்லாம் பாருங்கள். அவர்கள் எல்லாம் வேகமாக ரன் ஓடக்கூடிய நபராக இருப்பார்கள் என்று ரவி சாஸ்திரி பாராட்டினார்.