இந்திய அணிக்கு ஆலோசகராக சச்சின்... ரவி சாஸ்திரி விருப்பம்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி வந்தது முதல் அணியின் பொறுப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் இன்னொரு பகுதியாக இந்திய அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் வரவேண்டும் என்று கோச் ரவி சாஸ்திரி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே ரவி சாஸ்திரி பவுலிங் கோச்சாக, அருண் பரத்தை நியமிக்க விரும்பி அதைப்போலவே செய்து காட்டினார். இப்போது அவரின் கவனம் சச்சின் டெண்டுல்கர் பக்கம் திரும்பியுள்ளது. அதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் போர்டு வட்டாரத்தில்.
ஆனால் ரவி சாஸ்திரியின் விருப்பங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வரும் சவுரவ் கங்குலி, இந்த முறை என்ன செய்வார் என்று கிரிக்கெட் வாரியத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் பவுலிங் கோச்சாக ஜாகீர் கான் இருந்தார். பேட்டிங் கோச்சாக ராகுல் டிராவிட் இருந்தார்.

சாஸ்திரி விரும்பியபடி மாற்றம்
இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும் புதிய ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதுவும் கோச் ரவிசாஸ்திரி விருப்பப்படியே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல ஆலோசனை
"பவுலிங் மற்றும் பேட்டிங் ஆலோசகராக பயிற்சியாளர் விரும்பும் நபர்கள் பொறுப்பேற்கும் அணி இப்போதுதான் கிடைத்துள்ளது. பயிற்சியாளர் கருத்தும் மிக தேவைதான். ஜாகீர் கான், ராகுல் டிராவிட் இருவரும் நல்ல ஆலோசகர்கள்தான். அவர்கள் இப்போதல்ல, எதிர்காலத்தில் தேவைப்படும் நேரத்தில் நல்ல ஆலோசனைகளை வழங்குவர்." என்று ரவிசாஸ்திரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

8 கோடி சம்பளம்
இதனிடையே ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. முன்னாள் கோச் அனில் கும்ப்ளேவுக்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஐபிஎல் போட்டி
மற்ற மூன்று துணை கோச்சுகளுக்கு இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். அது ஐபிஎல் போட்டிகளுக்கும் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications