ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா தான் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்து தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் உலகில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டம் வரும் ஏழாம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா ஆஸ்திரேலியா வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி நீங்கள் போட்டி போட வேண்டும். இது போன்ற தொடரில் வெற்றி பெற அதிர்ஷ்டம் சில சமயம் உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நான் கூற மாட்டேன். நாம் சிறப்பாக விளையாடியது மூலம் தான் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறோம்.
எனினும் சில சூழல் நமக்கு சாதகமாக அமையவில்லை. நான் எப்போதும் கூறுவது உண்டு. இந்த அணி ஐசிசி கோப்பையை வெல்லுவதற்கு அனைத்து தகுதிகளுமே இருக்கிறது என்பதை தான் நான் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இதை தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
அதே வீரர்கள் இன்னும் இருப்பதால் நிச்சயம் இந்தியாவுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பலரும் ஆஸ்திரேலியாதான் இந்த தொடரை வெல்வார்கள் என கூறி வருகிறார்கள். காரணம் நாம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் விளையாடப் போகிறோம் என்பதால் அப்படி கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் இது ஒரே ஒரு டெஸ்ட் போட்டி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. டெஸ்ட் போட்டியில் ஏதேனும் ஒரு நாள் சரியாக உங்களுக்கு அமையவில்லை என்றால் கூட நீங்கள் தோல்வியை தழுவலாம். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.