லண்டன்: 2021ஆம் ஆண்டு சர்ரே அணிக்காக ஓவல் மைதானத்தில் விளையாடிய அஸ்வின், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடியும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆடுகளத்தில் ஸ்பின் பந்துவீச்சு எடுபடாது. அதனால் அஸ்வின் சேர்க்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் இரட்டை சதத்தையும், ஸ்டீவ் ஸ்மித் சதத்தையும் விளாச காத்திருக்கிறார்கள். இதில் இந்திய அணி பவுலர்களின் எகனாமி ரேட் ஒருவருக்கு கூட 3க்கு கீழ் இல்லை. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள், இப்படி மோசமாக பந்துவீசுவதற்கு அஸ்வினையே ஆட வைத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டம் ஓவல் மைதானத்தில் கவுண்டி கிரிக்கெட்டின் போது சர்ரே அணிக்காக ஆடிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே அட்டாக்கில் வந்த அஸ்வின், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஓவல் மைதானத்தில் பந்துவீசி அசத்திய அஸ்வினின் அசத்தல் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே ஓவல் மைதானம் டெஸ்ட் போட்டியின் 4 மற்றும் 5வது நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் இருக்கும் பட்சத்தில் இந்திய அணியில் ஜடேஜாவை மட்டும் வைத்து ரோகித் சர்மா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய அணி மீண்டும் ஐசிசி இறுதிப்போட்டியில் சொதப்பி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.