“என்னப்பா நடக்குது இங்கே?” மைண்ட் கேம் ஆடிய அஸ்வின்.. சீண்டிப்பார்த்த லபுசாக்னே.. ரசிகர்கள் குழப்பம்
இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான முறையில் விக்கெட் எடுக்க முயன்ற அஸ்வினுக்கும், மார்னஸ் லபுஸ்சாக்னேவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
முதல் இன்னிங்ஸில் 109 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் 163 ரன்களை மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி சுலபமாக வென்றது.

சுவாரஸ்ய சம்பவம்
எவ்வளவு குறைவான இலக்காக இருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் முயற்சிகளில் மட்டும் குறைவு என்பது இருக்கவே இருக்காது. குறிப்பாக எதிரணி வீரர்களை மனதளவில் குழப்பிவிட்டு விக்கெட் எடுப்பதில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதே போன்ற முயற்சியில் ஈடுபட்ட போது தான் இன்று சிறிய பிரச்சினை உருவானது. அம்பயரும், ரோகித்தும் சென்று தான் தீர்த்து வைத்தனர்.

என்ன ஆனது
முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னேவை வீழ்த்த வேண்டும் என அஸ்வின் தனது பவுலிங்கில் மாற்றத்தை கொண்டு வந்தார். வழக்கமான தூரத்தில் இருந்து வீசாமல், 2 அடி எடுத்து வைத்தால் டெலிவரி செய்வது போல பந்துவீசினார். இதனால் குழப்பமடைந்த லபுசாக்னே பேட்டிங் செய்யாமல் நகர்ந்துக்கொண்டே இருந்தார். ஒருமுறை சகஜமாக செய்கிறார் என்று பார்த்தால் வேண்டுமென்றே தொடர்ந்து தவிர்த்துக்கொண்டே இருந்தார்.

அஸ்வினின் ரியாக்ஷன்
வழக்கமாக இதுபோன்ற செயல்களுக்கு அஸ்வினும் கடுப்பாகி வாக்குவாதத்திற்கு சென்றுவிடுவார். ஆனால் இந்த முறை நீ என்னதான் செய்கிறாய் என்று பார்க்கலாம் என்பது போல பவுலிங் எண்டில் இருந்து சிரித்துக்கொண்டே இருந்தால். இதனால் நேரம் வீணாவதை பார்த்த நடுவரும், கேப்டன் ரோகித் சர்மாவும் லபுசாக்னேவிடம் சென்று சரியாக நின்று பேட்டிங் செய்யுமாறு எச்சரித்தனர்.

ரசிகர்கள் குழப்பம்
இதனையெல்லாம் பொறுமையாக கவனித்து வந்த ரசிகர்கள், சீரியஸாக சண்டைப்போடுகின்றனரா? நகைச்சுவையாக செய்கின்றனரா? என குழப்பத்தில் ஆழ்ந்தனர். அஸ்வினின் பல கட்ட முயற்சிகளையும் சமாளித்த லபுசாக்னே - டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியும் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.


Click it and Unblock the Notifications