டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்க வேண்டும் என்று ஜாம்பவான் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதில் இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

அதேபோல் அஸ்வினின் பந்துவீச்சிற்கு தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். ஒரு பக்கத்தில் இருந்து அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தார். இறுதியாக 10 ஓவர்கள் வீசிய அஸ்வின் ஒரு மெய்டன் உட்பட 32 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிட்டத்தட்ட 3 ஆயிரம் நாட்களுக்கு பின் ஐசிசி தொடரில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதனால் அஸ்வின் அனைத்து போட்டிகளிலும் சேர்க்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணி அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டி குறித்து வீரேந்தர் சேவாக் பேசுகையில், இந்தியாவின் மற்ற மைதானங்களை ஒப்பிடும் போது டெல்லி மைதானத்தில் பவுண்டரி தூரம் மிகவும் குறைந்ததாகும்.
அதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு கொடுப்பதே நல்ல யோசனை. ரவிச்சந்திரன் அஸ்வினை முக்கிய போட்டிகளுக்கு பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும். அதனால் டெல்லி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியை களமிறக்க வேண்டும்.
முகமது ஷமி மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆடுகளத்தில் ஸ்பின்னர்களை விடவும் வேகப்பந்துவீச்சாளர்களை சேர்ப்பதே சிறந்த முடிவு என்று நினைக்கிறேன். அதேபோல் அஸ்வினின் வயதை கணக்கிட்டு அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.