மொஹாலி: கடந்த 6 ஆண்டுகளில் இரண்டே ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ரவிச்சந்திரன் அஸ்வின் எங்கே என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக எழுப்பப்பட்டது. ஏனென்றால் இந்திய மண்ணில் ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் ஐசிசி தொடரில் விளையாடுவது கண்ணை கட்டிக் கொண்டு பேட்டை சுழற்றுவதற்கு சமமான ஒன்றாகும். அதில் இடதுகை பேட்ஸ்மேன்கள் நிறைந்துள்ள அணிகளுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர் இல்லையென்றால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்படும்.

சமீப ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆடினாலே எதிரணிகள் ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குவதில்லை. சென்னை அணியில் கூட மொயின் அலியை ஒவ்வொரு போட்டியிலும் களமிறக்குவதற்கு அதுவே காரணம். அதேபோல் பெரிய தொகை கொடுத்து ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தரை வாங்குவதற்கும் அதுவே காரணமாக அமைந்துள்ளது. இதனால் இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னருக்கான தேவை இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளின் போது அக்சர் படேல் காயம் காரணமாக விலகிய நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு உடனடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வந்தார். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இந்திய பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறவில்லை.
அதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடருக்கு தயார்ப்படுத்தும் வகையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 3 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆனால் நேற்றைய வலைபயிற்சியின் போது சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு பந்துவீசி மிரட்டியுள்ளார் அஸ்வின். அஸ்வினின் சுழலுக்கு சுப்மன் கில் திணற, இஷான் கிஷன் டவுன் தி ட்ராக் இறங்கி வந்து அடித்துள்ளார். உடனடியாக சுதாரித்த அஸ்வின், வேறு ஆங்கிளில் வீசி அனுபவ வீரர் என்பது நிரூபித்துள்ளார். இதனால் அஸ்வினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.