சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூணாக விளங்குபவர் ஜடேஜா. இருப்பினும் கடந்த சீசனில் கேப்டனாக பணியமர்த்தப்பட்டு பின் தொடர் தோல்வி காரணமாக அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால் ஜடேஜாவுக்கும் தோனிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக நம்பப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகமும் தோனியும் ஜடேஜா உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ஜடேஜா நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்புக் கொண்டுள்ளார்.

நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா பேட்டிங்கில் 113 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆனால் பந்துவீச்சு 16 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியை விமர்சித்து போடப்பட்ட பதிவுக்கு ஜடேஜா லைக் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தோனியை காண வேண்டும் என்பதற்காக ஜடேஜா ஆட்டமிழந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்புகிறார்கள்.
இது ஜடேஜாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை நேற்றைய போட்டியில் வெளிப்படையாகவே ஜடேஜா கூறிவிட்டார். தோனியை பார்க்க வேண்டும் என்பதற்காக நான் விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள் என கிண்டலாக கூறினார்.
இந்த நிலையில் ஜடேஜாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜடேஜா பேட்டியில் முகத்தில் போலி சிரிப்புடன் இவ்வாறு கூறி இருக்கிறார். ஆனால் அவர் மனதில் பல காயங்களும் வலிகளும் இருக்கிறது. கண்டிப்பாக சொல்கிறேன் ஜடேஜா மனதளவில் வருத்தப்படுகிறார்.
யோசித்துப் பாருங்கள் உங்களுடைய சொந்த ரசிகர்களே நீங்கள் விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு வலியை கொடுக்கும். ஜடேஜா மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகும் சிலர் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று அந்த பதிவு போடப்பட்டிருக்கிறது.
இதற்கு ஜடேஜா லைக் போட்டது தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. தோனியை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதே மாதிரி ஜடேஜாவும் பேட்டிங்கில் சொதப்புகிறார் என்பது அவ்வளவு உண்மை. ஜடேஜா பேட்டிங்கில் சரியாக விளையாடாததால் தான் ரசிகர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
ஆனால் ஜடேஜா பந்து வீசும் போது எப்போதும் போல ரசிகர்கள் அவருக்காக குரல் கொடுத்து தான் இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களின் இந்த நடவடிக்கை ஜடேஜாவுக்கு பொறாமை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் தான் இந்த விமர்சனப் பதிவுக்கு ஜடேஜா லைக் போட்டு இருக்கிறார் என சில ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.