சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறினாலும், பந்துவீச்சில் கலக்கி வருகிறார். நடப்புத் தொடரில் மும்பைக்கு எதிராகவும் ஹைதராபாத்துக்கு எதிராகவும் டெல்லிக்கு எதிராகவும் என மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
நடப்பு தொடரில் ஜடேஜா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் இன்று 16 பந்துகள் எதிர்கொண்டு 21ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய ஜடேஜா,ஒரு சுழல் பந்துவீச்சாளராக ஆடுகளத்தில் பந்து நின்று திரும்பும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனென்றால் நாங்கள் இங்குதான் பயிற்சி செய்து வருகிறோம். இதனால் எந்த லெங்தில், எந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதுதான் எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதில் நன்மையாகும்.நான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்குகிறேன்.
நான் பேட்டிங் செய்யும்போதெல்லாம் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள். காரணம் அவர்கள் தோனியை விரைவில் பார்க்க வேண்டும் என்பதற்காக மகி பாய் மகிபாய் என்று கத்துகிறார்கள்.நான் ஆட்டமிழந்து போகும் போது தோனி வருகிறார் என்பதற்காக மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்கள் இதுவே நான் பேட்டிங் வரிசையில் கொஞ்சம் முன்பு களமிறங்கி இருந்தால், அப்போதும் எங்கள் ரசிகர்கள் நான் விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள் என ஜடேஜா பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.ஜடேஜா 11 போட்டிகளில் நடப்பு சீசனில் விளையாடி பேட்டிங்கில் 113 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்.
இதில் அதிகபட்ச ஸ்கோரே 25 ஆகும். சராசரி 18 என்ற அளவிலே இருக்கிறது. ஜடேஜா கடைசி நேரத்தில் களமிறங்குவதால், நடப்பு தொடரில் வெறும் 80 பந்துகளை மட்டுமே அவர் சந்தித்திருக்கிறார். எனினும் ஜடேஜா தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ரன்களை குவித்து பழைய ஜடேஜாவாக திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.