அபுதாபி: டி20 உலகக் கோப்பை அணியில் தான் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை இன்று நிரூபித்துள்ளார் வருண் சக்கரவர்த்தி.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி போட்டிகள் நேற்று (செப்.19) தொடங்கியது. இதில், இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது.
பெங்களூரு அணியில் கோலி - தேவ்தத் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கத்திலேயே கோலியின் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. அவர் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 5 ரன்களில் வெளியேறினார். பிறகு ஃபெர்கியூசன் ஓவரில், தேவ்தத் படிக்கல் 22 ரன்களில் வெளியேற, ரஸல் ஓவரில் பெங்களூரு அணியில் அறிமுகமான இளம் வீரர் ஸ்ரீகர் பரத் 16 ரன்களில் அவுட்டானார். பிறகு, ரஸல் வீசிய அபாரமான யார்க்கர் பந்தில் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினா டி வில்லியர்ஸ்ர். இதனால், பெங்களூரு அணி 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
நேற்று மும்பை அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்சும் மிக விரைவாக 4 விக்கெட்டுகளை இழந்து, பின்பு சுதாரித்து மீண்டு வந்து 156 ரன்கள் எடுத்தது. பிறகு 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி மிரள வைத்தது தோனி ஆர்மி. அதேபோல், தங்கள் அணியும் மீண்டு வரும் என்று ஆர்சிபி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, ஏமாற்றமே மிஞ்சியது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
"மிஸ்ட்ரி ஸ்பின்னர்" வருண் சக்கரவர்த்தி ஓவரில் மேக்ஸ்வெல் 10 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இன்று நிச்சயம் மேக்ஸ்வெல்லுக்கான நாள் இல்லை என்று உறுதியாக கூறலாம். ஒரு பந்தை கூட உருப்படியாக அவர் மீட் செய்யவில்லை. இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்கா முதல் பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார்.
பிறகு, வருண் சக்கரவர்த்தி ஓவரில் சச்சின் பேபி 7 ரன்களில் கேட்ச் ஆனார். இதையடுத்து, வருண் ஓவரில் கைலே ஜெமிசன் 4 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரன் அவுட் செய்ததும் வருண் தான். (எத்தன!!). பிறகு, ஃபெர்குசன் ஓவரில் 12 ரன்களில் ஹர்ஷல் படேல் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக வெளியேறினார் சிராஜ். இறுதியில், பெங்களூரு அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தத் 22 ரன்களும், பரத் 16 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஆந்த்ரே ரஸல் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த மாதம் இதே அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்றைய போட்டியில் அவர் பந்து வீசிய விதம், அவர் அணியில் சேர்க்கப்பட்டதற்கு நியாயம் கற்பித்தது. அவரது பந்துவீச்சு உண்மையில் மிரள வைத்தது. எந்த பேட்ஸ்மேனாலும் அவரது சுழற்பந்து வீச்சை அடித்து ஆட முடியவில்லை.