மும்பை: ஐபிஎல் தொடரின் போது பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உடனான மோதல் குறித்து லக்னோ அணியின் நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான இளம் வீரராக உருவாகியவர் நவீன் உல் ஹக். விராட் கோலியுடனான மோதல், கேஎல் ராகுலின் பேச்சை கண்டுகொள்ளாதது, ரசிகர்களை பார்த்து "சைலன்ஸ்" சிக்னல், மாம்பழங்களுடனான கொண்டாட்டம், கேஎல் ராகுல் ஸ்டைலில் கொண்டாட்டம் என்று ரசிகர்கள் மறக்கவே முடியாத வகையில் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னரும் நவீன் உல் ஹக்கை, விராட் கோலி கோஷம் பின் தொடர்ந்தது. இந்த நிலையில் விராட் கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆர்சிபி - லக்னோ போட்டியின் போது நிகழ்ந்த மோதல் குறித்து போட்டிக்கு பின்னரோ அல்லது அடுத்த சில நாட்களிலோ விராட் கோலி விளக்கம் கொடுத்திருக்கலாம். என் மீது எந்தத் தவறும் இல்லை. போட்டிக்கு பின் கைகுலுக்கி கொண்ட போது, விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார்.
யார் சண்டையில் ஈடுபட்டார்கள் என்பது நடுவர்கள் விதித்த அபராதத்திலேயே தெரியும். பொதுவாகவே நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டேன். ஒருவேளை ஸ்லெட்ஜிங் செய்தாலும், பேட்டர்களுடன் மட்டுமே மோதலில் ஈடுபடுவேன். ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு பந்துவீச்சாளர் தான். ஆர்சிபி அணியுடனான போட்டியின் போது ஒரு வார்த்தை கூட நான் சொல்லவில்லை. அதேபோல் பவுலிங் செய்யும் போதும் சரி, பேட்டிங் செய்யும் சரி.. எனது கோபத்தை வெளிப்படுத்தவே இல்லை.
அந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலி தான் என் கைகளை அழுத்தமாக பிடித்து மோதலில் ஈடுபட்டார். நான் அதற்கு பதிலடி மட்டுமே கொடுத்தேன். ஏனென்றால் நானும் அனைத்து உணர்வுகளும் உள்ள மனிதன் தான் என்று தெரிவித்துள்ளார். நவீன் உல் ஹக்கின் விளக்கம் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கவுதம் கம்பீர் விராட் கோலியுடனான மோதல் பற்றி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது நவீன் உல் ஹக்கும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.