பெங்களூரு: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது. கடந்த இரு போட்டியில் டெத் ஓவர்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஆர்சிபி அணி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இதற்காக ஆர்சிபி அணியின் டெத் பவுலிங்கை வலிமையாக்கும் வகையில் வெய்ன் பார்னலை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் பிரேஸ்வெல், கரண் சர்மா நீக்கப்பட்டு, மிடில் ஆர்டரை வலிமையாக்கும் வகையில் லோம்ரோர் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரண் சர்மா இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் உள்ளார்.
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான கடந்த இரு போட்டிகளில் கடைசி 8 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி அணி 117 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும்தான் வீழ்த்தியது. இதனால் முதல் 16 ஓவர்கள் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பேரின் உழைப்பும் வீணாகும் சூழல் ஏற்பட்டது.
இதனை சரி செய்யும் வகையில் பிரேஸ்வெல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பார்னல் கொண்டு வரப்பட்டுள்ளார். இதன் காரணமாக டேவிட் வில்லி, சிராஜ், ஹர்சல் படேல் மற்றும் பார்னல் ஆகியோர் சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சுழலுக்கு ஷாபாஸ் அஹ்மத், இம்பேக்ட் பிளேயராக கரண் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் இருக்கிறார்கள். 7 பந்துவீச்சாளர்கள் இருப்பதால், ஆர்சிபி அணிக்கு அதிக ஆப்ஷன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.