ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி அணி தற்போது 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ்,இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
இது குறித்து பேசிய அவர் நிச்சயமாக இது எங்களுக்கு சிறந்த ஆட்டமாக அமைந்தது. இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் எங்கள் ரன் ரெட் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அது அதிகமாக இருக்கும். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு கொஞ்சம் கடினமாகவே தான் இருந்தது.

நான் 160 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் ஆக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இறுதியில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி கூடுதலாக ரன்களை சேர்த்தார்கள். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் இறுதி கட்டத்தில் பெரிய ரன்களை அடிக்க தவறி விட்டோம். தற்போது இந்த ஆட்டம் எங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
இந்த வெற்றியை அனைவரும் கொண்டாடுகிறோம். ஏனென்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதுக்கு இந்த வெற்றி ஒரு நல்ல மருந்தாக அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் எங்கள் அணி வீரர்களுக்கு புதிய உற்சாகம் கிடைத்திருக்கிறது. எங்கள் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என நம்புகிறேன் என்று டுப்ளசிஸ் கூறினார்.

இதேபோன்று வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி வீரர் மைக்கேல் பிராஸ்வெல், இந்த இரண்டு புள்ளிகள் எங்களுக்கு மதிப்பு மிக்கதாகும். நான் சில போட்டிகள் விளையாடாமல் திரும்பவும் ஐபிஎல் தொடரில் வந்து அணிக்காக பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனுஜ் ராவத் ஆடிய ஆட்டம் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
எங்களுடைய பந்துவீச்சாளர்களும் இன்று சிறப்பாக செயல்பட்டார்கள். இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்தாலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன் என்று பிராஸ்வெல் கூறினார்.