மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி நிர்ணயித்த 200 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவரிலே எட்டி அசத்தியது. இதில் சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார்.
இதில் 7 பவுண்டர்களும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுப்ளசிஸ் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் ஒரு 20 ரன்கள் ஆவது குறைவாக அடித்து இருக்கிறோம்.

இந்த சீசனில் மும்பை ஆடுகளத்தை பொறுத்தவரை 220 ரன்களுக்கு குறைவாக எந்த இலக்கு இருந்தாலும் அதனை மும்பை பேட்டிங் வரிசை எளிதாக துரத்தி விடும். மும்பை இந்தியன்ஸ் மிகவும் பலமான அணி. அவருடைய பேட்டிங் வரிசை மிகவும் ஆழமாக இருக்கிறது. நாங்கள் கடைசி ஐந்து ஓவரின் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. அது நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கிறது.
நாங்கள் பேட்டிங் செய்து முடித்தவுடன் 200 ரன்கள் நல்ல ஸ்கோர் தான் என்று எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொண்டோம்.
மும்பை ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் தோய்வாக இருந்ததால் பந்தின் வேகத்தை குறைத்து வீச முற்பட்டோம். ஆனால் சூரியகுமார் யாதவ் ஒரு சிறந்த வீரர்.அவருக்கு எப்படி பந்து வீசினாலும் அவர் அடிப்பார். சூர்யகுமாருக்கு பந்துவீசுவது என்பது மிகவும் கடினமான காரியம். ஏனென்றால் அவரிடம் பல சாட்கள் இருக்கிறது. இதனால் சூரியகுமார் யாதவை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாகும். இந்த சீசனில் எங்களுக்கு சிராஜ் நன்றாக தான் பந்து வீசினார்.
ஆனால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். இனி எஞ்சிய ஆட்டத்தில் பேட்டிங்கில் நன்றாக ரன் குவிக்க வேண்டும். ஆர் சி பி அணி தற்போது 11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய மூன்று ஆட்டத்திலும் ஆர்.சி.பி வெற்றி பெற்று மற்றவர்கள் உதவி இருந்தால் மட்டுமே இனி பிளே ஆப் சுற்றுற்கு செல்ல முடியும்.