பெங்களூரு: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டன் டூ பிளஸஸ் அடித்த சிக்சர் 115 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. சின்னசாமி மைதானத்தில் இருந்து பந்து வெளியே சென்றதால், ஆர்சிபி ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய டூ பிளஸிஸ், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் அதிரடிக்கு மாறினார். 12 ஓவர்களுக்கு பின் அவரின் அதிரடி உச்சத்தை எட்டியது. ஏனென்றால் விராட் கோலி ஆட்டமிழந்த பின் சில ஓவர்கள் பவுண்டரிகள் அடிக்கப்படவில்லை. 15வது ஓவருக்கு பின் டூ பிளஸிஸ் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து 16வது ஓவரை ரவி பிஷ்னாய் வீசினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்களை டூ பிளஸிஸ் அடித்தார்.
அதில் ஒரு சிக்சர் 115 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. மைதானத்தின் வெளியே அடிக்கப்பட்ட பந்தை கண்டு ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்லாமல் களத்தில் நின்றிருந்த வீரர்களும் மிரண்டு போனார்கள். இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி மொத்தமாக 15 சிக்சர்களை விளாசியுள்ளது. விராட் கோலி 4 சிக்சர்களையும், டூ பிளஸிஸ் 5 சிக்சர்களையும், மேக்ஸ்வெல் 6 சிக்சர்களையும் விளாசினார். கிட்டத்தட்ட பெங்களூரு சிக்சர் மழை பொழிந்தது என்றே கூறலாம்.

கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்காக ஆடிய போது அடிக்கபடி இதுபோல் பந்துகள் மைதானத்திற்கு இருந்து வெளியில் அடிக்கப்படும். அதன்பின்னர் நீண்ட நாட்களுக்கு பின் டூ பிளஸிஸ் பந்தை அடித்து வெளியே அனுப்பியுள்ளார். சிறப்பாக ஆடிய டூ பிளஸிஸ் 46 பந்துகளில் 79 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி 200 ரன்கள் விளாசிய பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.