பெங்களூரு: ஆர்சிபி அணி தோல்வியடைந்த விரக்தியில், குஜராத் அணி வீரர் சுப்மன் கில் சகோதரியை ரசிகர்கள் எல்லைமீறி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய காலத்தில் கிரிக்கெட் போட்டியில் எந்த அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் எதிரணி ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டுவார்கள். இவ்வளவு ஏன், சென்னையில் வைத்து இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்திய போது கூட ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை எழுந்து நின்று கைதட்டி ரசித்தார்கள்ம். இன்றளவும் அது எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வென்று இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்க முடியும். ஆனால் சுப்மன் கில் தனி ஆளாக நின்று 52 பந்துகளில் 14 ரன்கள் விளாசி 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்து குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினார். இதுகுறித்து பாராட்டிய கவாஸ்கர் ஆர்சிபி அணி இந்த தோல்வி குறித்து மனம் வருந்தக்கூடாது. ஏனென்றால் ஒரு சிறந்த திறமை வாய்ந்த வீரரிடம் தான் நாம் தோற்று இருக்கிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சுப்மன் கில், இந்த சதத்தால் தான் நாம் தோற்றுப் போய் விட்டோம் என எண்ணி ஆர் சி பி ரசிகர்கள் அவருடைய சகோதரியிடம் அநாகரீகமான முறையில் சமூக வலைத்தளத்தில் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டம் முடிந்த பிறகு சுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டிருந்தார்.
அதற்கு அவருடைய சகோதரி மை பேபி என்று பாராட்டி இருந்தார். இதற்கு கீழ் படிக்கவே முடியாதபடி பல்வேறு மூன்றாம் தர கருத்துக்களை ரசிகர்கள் போட்டிருந்தார்கள். சுப்மன் கில் தங்கையை எப்படி எல்லாம் கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு ரசிகர்கள் விமர்சித்து இருந்தார்கள். மேலும் சிலர் ஒருபடி மேல் சென்று ரிஷப் பன்ட் கார் விபத்தில் சிக்கியதற்கு பதில் இவர் சிக்கி இருக்கலாம் என்று போஸ்ட் போட்டு இருந்தார்கள்.
இதற்கு பல கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் இந்த சமூக வலைத்தள பதிவை பார்த்து கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சுப்மன் கில் சகோதரியிடம் அத்துமீறிய ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.