
நொந்து நூலான சிஎஸ்கே
பிளே ஆஃப் நுழைந்த மூன்று அணிகளில் டெல்லி, பெங்களூரு அணிகள் தற்போது கம்ஃபர்டபளாக உள்ளன. ஆனால், இதில் பெரும் சிக்கலில், குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அமீரகத்தில் வரிசையாக வெற்றிப் பெற்று வந்த தோனியின் யெல்லோ ஆர்மி, கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமாக தோல்வி அடைந்திருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 189 ரன்கள் அடித்தும், 2 ஓவர்கள் மீதம் வைத்து எதிரணி வெல்ல, நொந்து நூலானது சிஎஸ்கே. பிறகு, டெல்லியுடன் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இரண்டாமிடம் பிடிக்க வாய்ப்பு
இதனால், 13 போட்டிகளில் விளையாடிய சென்னை நான்காவது தோல்வியை சந்திக்க, புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்துக்கு சறுக்கியது. டெல்லி முதலிடத்துக்கு முன்னேற, இப்போது ஆர்சிபி 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் புள்ளிகள் 18. எனினும், கைவசம் ஒரேயொரு போட்டி மட்டுமே சிஎஸ்கேவுக்கு மீதமுள்ளது. பெங்களூருவுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது. குறிப்பாக, இன்று நடைபெறும் போட்டியில் வலிமையே இல்லாத சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் வென்று, கடைசியாக டெல்லியுடன் மோதும் போட்டியிலும் வென்றால், 20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப்புடன் சிஎஸ்கே தோற்றால், நிச்சயம் பெங்களூரு இரண்டாம் இடம் பிடித்துவிடும்.

பெரும் பின்னடைவு
ஸோ,ஐபிஎல்-லை பொறுத்தவரை பிளே ஆஃப் விதிமுறைகள் தெளிவாக அனைவருக்கும் தெரியும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் தோற்கும் அணி, 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த அணிகள் மோதிய போட்டியில் வெற்றிப் பெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிப் பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஸோ, முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பது என்பது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான விஷயமாகும். அதேசமயம், முதல் அணியாக பிளே ஆஃப் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்றாம் இடம் பிடித்தால் நிச்சயம் அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

தங்க ஊசி
ஜஸ்ட் 2 பேக் டூ பேக் தோல்வி.. சென்னையின் நிலைமையை எங்கு கொண்டுவந்து விட்டது பார்த்தீர்களா? இது தான் ஐபிஎல்-லின் சுவாரஸ்யம். சென்னை அணியின் மிகப்பெரும் மைனஸாக இருப்பது மிடில் ஆர்டரும், தோனியின் பேட்டிங்கும் தான். குறிப்பாக தோனி, அணியின் சுமையாக இருக்கிறார். 'தங்க ஊசி என்பதற்காக எடுத்து குத்திக் கொள்ள முடியுமா?' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அது போல் தான் இப்போது தோனியின் நிலைமையும். இந்த பின்னடைவுகளை பயன்படுத்தி, ஆர்சிபி முதலிரண்டு இடங்களில் முன்னேற வியூகம் அமைத்து வருகிறது. அதில், மிக முக்கியமானது இன்று சன் ரைசர்ஸ் அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்துவது. கடைசி போட்டி டெல்லிக்கு எதிரானது என்பதால், சவால் அதிகமிருக்கும். வெற்றிப் பெற்றாலும் அதிக ரன் ரேட் பெற முடியுமா என்பது தெரியாது. ஆனால், இத்தொடரில் ஃபார்மில் இல்லாத ஒரே அணியாக வலம் வரும் ஹைதராபாத்தை ஆக்ரோஷமாக விளையாடி வீழ்த்தி, ரன் ரேட்டை அதிகப்படுத்தி, சிஎஸ்கே-வை மூன்றாம் இடத்துக்கு தள்ள வேண்டும் என்பதில் கோலி ஆர்மி மிகத் தீவிரமாக உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











