மும்பை: இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்விங் பவுலராக அறியப்பட்ட புவனேஸ்வர் குமார், தனது கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.
அந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. 35 வயதான புவனேஸ்வர், இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறினார். இது குறித்து பேசிய அவர், "தேர்வுக்குழுவினரால் மட்டுமே இதற்கு பதில் கூற முடியும். எனது வேலை மைதானத்தில் 100 சதவீதம் கொடுப்பது, அதை நான் செய்து வருகிறேன்."

"உத்தரப் பிரதேசத்திற்காக முஷ்டாக் அலி, ரஞ்சி அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதிலும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்," என்று புவனேஷ்வர் குமார் கூறினார்.
"ஒரு ஒழுக்கமான பந்துவீச்சாளராக, எனது கவனம் உடற்தகுதி மற்றும் பந்து வீச்சின் லெங்கில் மட்டும் உள்ளது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக ஆடினாலும், சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு உதவுவதில்லை. உங்கள் செயல்பாடு மிக முக்கியமானது. ஒருவர் தொடர்ந்து சிறப்பாக கிரிக்கெட் ஆடினால், அவரை நீண்ட நாள் புறக்கணிக்க முடியாது."
அணியில் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், 100 சதவீதம் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவை தேர்வுக்குழுவினரைப் பொறுத்தது" என்று புவனேஷ்வர் கூறினார்.நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியில் புவனேஸ்வர் குமார் முக்கிய பங்காற்றினார்.
14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்தார். முந்தைய சீசனில், அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 15 விக்கெட்டுகள் எடுத்தார், ஆனால் மெகா ஏலத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்டார். தனது ஐபிஎல் வாழ்க்கையில், புவனேஷ்வர் 190 போட்டிகளில் விளையாடி 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விக்கெட் எடுத்தவர்களில் ஒருவராக உள்ளார்.