கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளஸிஸ் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பவர் பிளே ஓவர்களில் தைரியமான சுழல்பந்துவீச்சாளர்களை கொண்டு வந்ததற்கான பலனை கேகேஆர் அணி அறுவடை செய்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி குர்பாஸ் 57 மற்றும் ஷர்துல் தாகூரின் 68 ரன்களால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை விரட்ட ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி களமிறங்கியது. இந்த கூட்டணி பவர் பிளேவை அதிரடியாக தொடங்கியது. குறிப்பாக டிம் சவுதி வீசிய 4வது ஓவரில் டூ பிளஸிஸ் 23 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் இவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த உடனடியாக கேப்டன் ராணா, சுழலை அட்டாக்கில் கொண்டு வந்தார். சுனில் நரைன் வீசிய 5வது ஓவரில் விராட் கோலி 18 பந்துகளில் 21 ரன்களில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து பவர் பிளேயின் கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார்.
அந்த ஓவரில் அதிரடியாக ஆடிய டூ பிளஸிஸ் 23 ரன்களில் போல்டாக, ஆர்சிபி அணி சிக்கலில் சிக்கியது. தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் 5 ரன்களில் வருன் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி வெளியேறினார். அதேபோல் திடீரென களமிறக்கப்பட்ட ஹர்சல் படேலும் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி போல்டானார். கொல்கத்தா அணி தரப்பில் வீழ்த்தப்பட்ட அனைத்து விக்கெட்டுகளும் போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டது இன்னொரு சிறப்பான சம்பவம்.
அதேபோல் 16 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேலாக இலக்கை வெற்றிகரமான சேஸ் செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தப் போட்டியிலும் பெங்களூரு அணி வெற்றி பெறுவது எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.