
ஆர்சிபி சிறப்பான வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் பெற்றுள்ள வெற்றி மூலம் ஆர்சிபி ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு தாவியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று மிகவும் வலிமையான அணியாக இந்த சீசனில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

முகமது சிராஜ் சிறப்பு
நேற்றைய போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி கொண்டது ஆர்சிபி. இதற்கு முக்கிய காரணமாக இறுதி ஓவரை போட்ட முகமது சிராஜ் காணப்பட்டார். இறுதி ஓவரை அவர் சுருக்கியதை அடுத்து அதிரடி காட்டிய ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயரால் வெற்றியை சாத்தியப்படுத்த முடியவில்லை.

ஆர்சிபி அறிவிப்பு
இதனிடையே, அந்த அணியிலிருந்து கொரோனா பரவல் மற்றும் சொந்த காரணங்களால் கடந்த திங்கட்கிழமை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் சம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் நீங்கியுள்ளனர். அவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பவுள்ளனர். அவர்கள் தொடர்ந்து இந்த சீசனில் விளையாட மாட்டார்கள் என்று ஆர்சிபி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆர்சிபி ஆலோசனை
மேலும் அவர்களது முடிவுக்கு மதிப்பளிப்பதாகவும் தொடர்ந்து ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் சேர்ப்பது குறித்தும் ஆர்சிபி நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

ஸ்காட் குகலீஜின் சேர்ப்பு
இந்நிலையில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக நியூசிலாந்து பௌலர் ஆல்-ரவுண்டர் ஸ்காட் குகலீஜினை அணியில் இணைத்துள்ளதாக ஆர்சிபி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மும்பை அணியின் நெட் பௌலராக இருந்த அவர் தற்போது ஆர்சிபியின் பயோ பபுளில் நேற்று முதல் இணைந்துள்ளதாகவும் ஆர்சிபி அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை
முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர் ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் அகமதாபாத்தில் ஆர்சிபி பயோ -பபுளில் இணைந்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications











