பெங்களுரு : சில நாட்கள் முன்பு ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து மூத்த பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உட்பட சிலர் நீக்கப்பட்டார்கள். அந்த அணி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது அணியின் பயிற்சியாளராக நியமிக்க இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அல்லது தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.
கோலியின் யோசனைகளோடு தான் இந்த மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஐபிஎல்-இல் பெங்களூர் அணி சிறந்த வீரர்களை கொண்டு இருந்தும் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. 14 போட்டிகளில், ஆறில் மட்டும் தான் வென்றது. அந்த நிலையை அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் மாற்றவே இந்த பயிற்சியாளர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ட்ரென்ட் வுட்ஹில், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சு ஆலோசகராக கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் இணைந்த ஆஷிஷ் நெஹ்ரா அதே நிலையில் தொடர்கிறார்.
அடுத்த தலைமை பயிற்சியாளராக பரிசீலனையில் இருக்கும் சஞ்சய் பங்கர் வருவதற்கு வாய்ப்பில்லை. தற்போது இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பங்கர், இந்த பதவியில் இருக்கும் போது ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருக்க முடியாது. எனவே, அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பணியை விடுத்தது பெங்களூர் அணிக்கு வருவாரா என்பது சந்தேகம். எனவே, கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளராக வரவே அதிக வாய்ப்புண்டு.