IPL 2026: 18,520 கோடி கொடுக்க ரெடி.. ஆர்சிபி அணியை வாங்க சுவீடன் நிறுவனம் போட்டி
மும்பை: ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்குவதற்கான போட்டியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான ஈக்யூடி (EQT) குரூப் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்த நிறுவனம் பெங்களூரு அணிக்காக சுமார் 2 முதல் 2.1 பில்லியன் டாலர் (சுமார் 18,520 கோடி) மதிப்பிலான பிரம்மாண்டமான தொகையை இறுதி ஏலத்தில் வழங்க தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி உள்ளன. இதற்கு முன் லான்சர் கேபிடல் என்ற நிறுவனம் 1.8 பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்தது. அதை விட மிக அதிக தொகைக்கு வாங்க ஈக்யூடி நிறுவனம் முன்வந்துள்ளது.
தற்போது ஆர்சிபி அணி பிரிட்டனை சேர்ந்த பிரபல மதுபான நிறுவனமான டியாஜியோவின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் வசம் உள்ளது. அந்த நிறுவனம் தங்களது முக்கியமில்லாத முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நோக்கில், கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தங்களது முழு பங்குகளையும் விற்பனை செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விற்பனையில் ஐபிஎல் ஆடவர் அணி மட்டுமின்றி, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் மகளிர் அணியும் முழுமையாக அடங்கும்.

ஆர்சிபி அணியை வாங்குவதற்கான இறுதி ஏலத்தை சமர்ப்பிக்க மார்ச் 16 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற முதற்கட்ட ஏலத்தின் அடிப்படையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, மணிப்பால் குழுமத்தின் தலைவர் ரஞ்சன் பாய், சுவீடனின் ஈக்யூடி மற்றும் லான்சர் கேபிடல் உட்பட சுமார் 9 முதல் 10 முன்னணி முதலீட்டாளர்கள் அடுத்த சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2026 தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த மெகா விற்பனை நடவடிக்கைகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 தொடரில் நடப்பு சாம்பியனாக களம் காண உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த விற்பனையின் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக மதிப்புமிக்க அணிகளில் ஒன்றாக உருவெடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications