ஐதராபாத்: பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் ஹசரங்கா காயத்தில் இருந்து வந்தாலும் ஆர்சிபி அணியில் பிரேஸ்வெல்லே தொடர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு உறுதியாகும் என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஐதராபாத் அணி சார்பாக ஹாரி ப்ரூக் மற்றும் கார்த்திக் தியாகி சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

காயத்தில் இருந்து ஹசரங்கா முழுமையாக குணமடையாததால், மீண்டும் பிரேஸ்வெல் அணி சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் சார்பாக அபிஷேக் சர்மா - ராகுல் த்ரிப்பாட்டி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்த கூட்டணி முதல் 3 ஓவர்களுக்கு நிதானமாக ஆடியது. ஆனால் பார்னல் வீசிய 4வது ஓவரில் ராகுல் த்ரிப்பாட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசினார். பின்னர் அபிஷேக் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் விளாசப்பட்டது.

இதன் காரணமாக ஆர்சிபி அணி உடனடியாக ஸ்பின்னரான பிரேஸ்வெல்லை அட்டாக்கில் கொண்டு வந்தது. அவர் வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா கவர் பாய்ண்ட் திசையில் நின்றிருந்த லோம்ரோரிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து 3வது பந்திலேயே ராகுல் த்ரிப்பாட்டியும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி சிக்கலில் சிக்கியது.
3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேஸ்வெல் மிரட்டினார். ஹசரங்காவுக்கு பதிலாக விளையாடி வரும் பிரேஸ்வெல், அவரை விடவும் சிறப்பாக பந்துவீசி வருவதால் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் அதிரடியாக ரன்கள் சேர்க்கக்கூடியவர் என்பதால், ஹசரங்கா நிரந்தரமாக பெஞ்ச் செய்யப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளது.