லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்பிசி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 43 ரன்கள் சேர்த்தால், ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாட உள்ளது. கடந்த முறை இந்த இரு அணிகள் மோதிய போட்டி கடைசி பந்து வரை சென்றது. அதில் இறுதியாக தினேஷ் கார்த்திக் செய்த தவறு காரணமாக லக்னோ அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணிக்கு பெங்களூரு அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் முக்கியமானது. ஏனென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அபாரமான ஃபார்மில் விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி, பின்னர் தேவைக்கு ஏற்ப ஆங்கர் இன்னிங்ஸை கட்டமைத்து வருகிறார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 142.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 333 ரன்களை குவித்துள்ளார்.
இதனால் இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலியின் பேட்டிங் பெங்களூரு அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி இன்னொரு சாதனையை படைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதுவரை 231 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 6 ஆயிரத்து 957 ரன்களை குவித்துள்ளார்.

இதனால் லக்னோ அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 43 ரன்கள் சேர்த்தால், ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 16வது சீசன் வரை விளையாடிய ஒருசில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். 231 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6,957 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார். அதில் 5 சதங்களும், 49 அரைசதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.