மும்பை: 2025 ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையில், அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், பல ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்து, இறுதியாக 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பெரிய அணிகளை பின்னுக்குத் தள்ளி, மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஹூலிஹான் லோகே (Houlihan Lokey) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஐபிஎல் தொடரின் முடிவில் ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு, இந்திய மதிப்பில் சுமார் ₹2,246 கோடியாக (269 மில்லியன் டாலர்கள்) உயர்ந்துள்ளது. 2024-ல் ₹1,895 கோடியாக (227 மில்லியன் டாலர்கள்) இருந்த ஆர்சிபி-யின் மதிப்பு, ஒரே ஆண்டில் 18.5% வளர்ச்சி கண்டுள்ளது. 17 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு கோப்பையை வென்றது, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இந்தப் பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ₹2,021 கோடி (242 மில்லியன் டாலர்கள்) மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட மும்பை அணியின் மதிப்பு 18.6% அதிகரித்துள்ளது.
அதேநேரம், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் மதிப்பு சுமார் ₹1,962 கோடியாக (235 மில்லியன் டாலர்கள்) உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிஎஸ்கே-வின் பிராண்ட் மதிப்பு வெறும் 1.7% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த அறிக்கையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மற்றொரு அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS). கடந்த ஆண்டை விட 39.6% என்ற அசுர வளர்ச்சியுடன், வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் பிராண்ட் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றுள்ளது. அதன் தற்போதைய மதிப்பு சுமார் ₹1,177 கோடியாக (141 மில்லியன் டாலர்கள்) உள்ளது.
இந்த பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சுமார் ₹1,019 கோடி (122 மில்லியன் டாலர்கள்) மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும், அந்த அணியும் 34.1% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.