RCB vs DC: "ஸ்மிருதி அக்கா நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க.. சாம்பியன்ஷிப் அவங்களுக்குத்தான்" - ஸ்ரேயாங்கா
வதோதரா: 2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெற்றிக்குப் பிறகு பேசிய இளம் வீராங்கனை ஸ்ரேயாங்கா பாட்டீல், இந்த வெற்றியைத் தனது கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
வதோதராவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மூன்று பேருக்குச் சமர்ப்பணம்
வெற்றிக் கோப்பையைக் கையில் ஏந்திய பிறகு பேசிய ஆர்சிபி வீராங்கனை ஸ்ரேயாங்கா பாட்டீல், "இந்தத் தருணத்தில் நான் மூன்று முக்கியமான நபர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக ஸ்மிருதி மந்தனா. கடந்த சில மாதங்களாக அவர் தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களைக் கடந்து வந்துள்ளார். அதனால் இந்த வெற்றியை நான் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்," என்று கூறினார்.
மேலும் அவர், "அடுத்ததாகப் பயிற்சியாளர் மலோ மற்றும் அன்யா ஆகியோருக்கும் இதைச் சமர்ப்பிக்கிறேன். இன்று அன்யாவின் மகனுக்கு முதல் பிறந்தநாள். அதேபோல மலோ தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பை வென்றுள்ளோம். அதனால் இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்" என்று தெரிவித்தார்.
ஸ்மிருதி கடந்து வந்த பாதை
ஸ்மிருதி மந்தனா கடந்த சில மாதங்களாகக் கடினமான சூழலைக் கடந்து வந்ததாக ஸ்ரேயாங்கா கூறியதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், சில மோசமான காரணங்களால் அந்தத் திருமணம் நின்று போனதாகக் கூறப்படுகிறது.
திருமணம் நின்ற சோகம் மற்றும் தனிப்பட்ட மனவருத்தத்தில் இருந்தும் மீண்டு வந்து, அணியை வழிநடத்தி இப்போது கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார் ஸ்மிருதி. களத்தில் அவர் காட்டிய அதிரடி ஆட்டம், அவரது மன உறுதியைக் காட்டுவதாக அமைந்தது. இதைத்தான் ஸ்ரேயாங்கா பாட்டீல் மறைமுகமாகக் குறிப்பிட்டு, தனது கேப்டனுக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்த வெற்றியைச் சமர்ப்பித்துள்ளார்.
கலக்கிய ஸ்மிருதி - ஜார்ஜியா ஜோடி
இறுதிப்போட்டியில் 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோல் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தனர். ஜார்ஜியா 54 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களை மறந்து, அணியின் நலனுக்காகப் போராடி கோப்பையை வென்று தந்த ஸ்மிருதி மந்தனாவை சக வீராங்கனைகளும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications