லண்டன்: ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸ்களில் வெறும் 140 ரன்கள் மட்டுமே சேர்த்த தினேஷ் கார்த்திக், மீண்டும் வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
அண்மையில் முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. வழக்கம் போல் பெங்களூரு அணியின் ஈசாலா கப் நம்தே கனவும் கனவாகவே மாறியது. இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோப்பையை வெல்லாத என்ற பெயரை மீண்டும் ஆர்சிபி அணி சுமக்க தொடங்கியுள்ளது.
இந்த சீசனில் வழக்கம் போல் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் கூட்டணி வெளுத்து வாங்க, மற்ற வீரர்கள் வழக்கம் போல் பெட்டிப்பாம்பாக அடங்கினர். மிடில் ஆர்டரில் எந்த வீரரும் ரன்கள் சேர்க்காததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக 2022ஆம் ஆண்டு சீசனில் அசத்திய தினேஷ் கார்த்திக் மொத்தமாக சொதப்பினார்.
ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்திக் படைத்தார். மொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 140 ரன்களை மட்டுமே தினேஷ் கார்த்திக் சேர்த்தார். இதனால் ஆர்சிபி ரசிகர்களே, தினேஷ் கார்த்திக்கை மீண்டும் கமெண்ட்ரி-க்கே சென்றுவிட கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின், மீண்டும் கமெண்ட்ரிக்கே திரும்பியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்யவுள்ளார். இந்தியாவில் இருந்து ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் ஆகியோரோடு தினேஷ் கார்த்திக் பெயரும் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஆஷஸ் தொடரிலும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
இதனை தினேஷ் கார்த்திக்கே உறுதி செய்துள்ளார். 38 வயதாகும் தினேஷ் கார்த்திக், கடந்த ஆண்டே வர்ணனையாளராக அறிமுகமாகி இருந்தார். இதனிடையே 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமைந்ததால் கமெண்ட்ரி பக்கம் திரும்பாமல் இருந்தார். இந்த ஐபிஎல் சீசன் சரியாக அமையாத சூழலில், மீண்டும் வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதையடுத்து பலரும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.