
ஏப்ரல் 9ல் துவக்கம்
ஐபிஎல்லின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கென 8 ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. ஐபிஎல் ஏலத்தில் தங்களது அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை பூர்த்தி செய்யும்வகையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பயிற்சி முகாம்களை அணிகள் முடுக்கியுள்ளன.

29ம் தேதி துவக்கம்
கடந்த சில தினங்களாக சென்னையில் சிஎஸ்கே தனது பயிற்சிகளை துவக்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ஆர்சிபி அணியும் தனது பயிற்சி முகாம்களை வரும் 29ம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் சென்னையில் ஆர்சிபி தங்களது பயிற்சிகளை துவங்கவுள்ளது.

மைக் ஹெசன் அறிவிப்பு
இதுகுறித்து அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் அறிவித்துள்ளார். அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசியுள்ள ஹெசன், ஐபிஎல்லையொட்டி அணியின் முக்கிய வீரரான ஏபி டீ வில்லியர்ஸ் வரும் 28ம் தேதி இந்தியா வரவுள்ளதாகவும், பின் ஆலன் 2ம் தேதி இந்தியா வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான வீரர்கள்
கடந்த ஆண்டு ஐபிஎல்லில் முறையான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்ததாகவும் ஆனால் இந்த ஆண்டில் ஐபிஎல் வீரர்கள் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருவதாகவும் அதனால் அதிகமாக பயிற்சிகளுடன் அவர்கள் ஐபிஎல்லை எதிர்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விராட் அறிவிப்பு
வரும் 9ம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள நிலையில் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் ஆர்சிபி சென்னையில் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் தான் துவக்க வீரராக களமிறங்கி விளையாடவுள்ளதாக முன்னதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











