ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் கூறுகையில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் 3 முதல் 4 வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். தற்போதைய சூழலில் நெட் ரன் ரேட்டை விடவும், போட்டிகளில் வெல்வதே முக்கியம். இன்றையப் போட்டியில் ஹேசல்வுட்டிற்கு பதிலாக பார்னல் மற்றும் ஹசரங்காவுக்கு பதில் பிரேஸ்வெல் இடம்பிடித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். இந்தப் போட்டி எங்களுக்கு அரையிறுதி ஆட்டத்தை போன்றதாகும். குஜராத் அணிக்கு எதிரான போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடியுள்ளோம். இன்றையப் போட்டியில் போல்ட்-க்கு பதிலாக ஷாம்பா சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், பிரேஸ்வெல், பார்னல், கரண் சர்மா, ஹர்சல் படேல், முகமது சிராஜ்
ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ஜோ ரூட், துருவ் ஜுரெல், ஹெட்மயர், அஸ்வின், ஆடம் ஷாம்பா, சந்தீப் சர்மா, ஆசிஃப், சாஹல்