அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணியின் ஓப்பனர்கள் ஆடிய விதம் உண்மையில் யாருமே எதிர்பார்க்காத ஒன்று.
ஏனெனில், பெங்களூரு அணியின் விக்கெட்டுகளை ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி அறுவடை செய்தார். பெங்களூரு பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளை கணிக்க தவறினார்கள்.
ஆர்சிபி அடித்தது வெறும் 92 ரன்கள் தான் என்றாலும், கொல்கத்தா அதை 10 ஓவர்களில் எட்டிப்பிடிக்கும் என்று விராட் கோலி கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார்.
ஏனெனில், யுவேந்திர சாஹல், வனிந்து ஹஸரங்கா என்று குவாலிட்டி ஸ்பின்னர்கள் பெங்களூரு அணியிலும் இருந்தார்கள். இதனால், பெங்களூரு தோற்றாலும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் அந்த எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தனர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே வெளுக்கத் தொடங்கிவிட்டனர்.
விரலே முறிந்தாலும்.. திரும்பி போக மாட்டேன்.. டிரெஸ்ஸிங் ரூமில் சொன்ன ஸ்டோக்ஸ்.. ப்பா தில் முடிவு
ஷுப்மன் கில் 34 பந்துகளில் 48 ரன்கள் விளாசி அவுட்டானார். ஏதோ, ரயிலை பிடிக்க அவசர அவசரமாக ஓடுபவர் போல் இருந்தது அவரது ஆட்டம். இந்த 48 ரன்களில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். ஷுப்மன் கில்லின் இந்த ஆட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அவர் 'ஸ்லோ பேட்ஸ்மேன்' என்று தான் கடந்த காலங்களில் பெயர் பெற்றிருந்தார். அவரால் 100 ஸ்டிரைக் ரேட் கூட எடுக்க முடியாது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, ஐபிஎல் தொடர்களில் இதற்கு முந்தைய சீசன்களில், இவரது பேட்டிங் ஓரளவு கன்சிஸ்டன்சியாக இருந்தாலும், அதிரடி என்பது அறவே இருக்காது.
இதனால், டி20 போட்டிகளில் விளையாட இவர் லாயக்கு என்று பலரும் விமர்சித்தனர். ஷுப்மன் கில்லால் நல்ல ஆவரேஜ் வைத்திருக்க முடியும், ஆனால் நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்திருக்க முடியும் என்று விமர்சிக்கப்பட்டார். அவரது ஸ்லோ பேட்டிங்கால் சில போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷுப்மன் கில், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக முதல் போட்டிக்கு முன்னரே அணியில் இருந்து வெளியேறினார். இதனால், கடும் மன அழுத்தத்தில் இருந்த கில், நேற்று முதல் போட்டியில் தனது அத்தனை அழுத்தத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டார்.
அவரது ஒவ்வொரு ஷாட்டிலும், அவர் யாரோ ஒருவருக்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் அடித்த ஒவ்வொரு பவுண்டரியும், யாரோ ஒருவரிடம், "இந்தா வச்சுக்கோ"என்று சொன்னது போன்றே இருந்தது. அவரை விமர்சனம் செய்தவர்களுக்கு அப்படி பதிலடி கொடுத்தாரா, அல்லது தனக்கு தானே இந்த பதிலை கொடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால், அடி ஒவ்வொன்றும் இடி போன்று இருந்தது. 48 ரன்கள் வந்த பிறகு கூட அவர் 50 ரன்கள் எடுக்க ஆசைப்படவில்லை. இறங்கி சிக்ஸர் விளாசவே ஆசைப்பட்டார். அதனால், அவுட் ஆனார். இது, பழைய ஷுப்மன் கில்லின் கேரக்டரே அல்ல. வலியும், அவமானமும், புறக்கணிப்பும் அவரை இந்த வேகத்தில் ஆட வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.