கொழும்பு : இந்தியா - வங்கதேசம் இடையே ஆன ஆசிய கோப்பை சூப்பர் ர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மாதான். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என பாதி அணியை மாற்றினார். அதில் சில மாற்றங்கள் இந்திய அணிக்கு எந்த வகையிலும் உலகக்கோப்பை தொடரில் பயன்தரப் போவதில்லை.

அப்படி எதற்காக வாய்ப்பு கொடுக்கிறோம் என்றே தெரியாமல் இரண்டு வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் 266 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியின் பேட்டிங் திட்டமும் கேள்விக்குறியாக இருந்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 265 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சுப்மன் கில் சதம் அடித்தாலும் அது அணிக்கு பயன் தரவில்லை. அவரை அடுத்து அதிகபட்சமாக ரன் சேர்த்தது அக்சர் பட்டேல். அவர் 42 ரன்கள் சேர்த்தார்.
ஐந்து மாற்றம் அவசியமா? : இந்தப் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஐந்து மாற்றங்களை செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா. கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, ஷமி. வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரேடியாக ஐந்து வீரர்களை மாற்ற வேண்டுமா? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. இதில் திலக் வர்மாவிற்கு இதுதான் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி.
உலகக்கோப்பையில் இல்லாத வீரர்கள் ஏன்? : சரி, அந்த ஐந்து மாற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் கூட, உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணி, அது சார்ந்த மாற்றங்களை செய்து இருக்க வேண்டும். ஆனால், உலகக்கோப்பைக்கான உத்தேச அணியில் இடம் பெறாத திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணாவிற்கு ஏன் இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது பெரிய கேள்விக் குறி. அவர்களுக்கு பதிலாக கோலி, சிராஜ் அல்லது பும்ரா ஆடி இருக்கலாம். அது இந்தப் போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.
ஷர்துல் தாக்குர் செயல்பாடு : வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் விக்கெட் எடுக்கும் திறன் பெற்ற பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவர் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்கிறார். இந்தப் போட்டியில் கூட அவர் 10 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்தாலும் 65 ரன்களை கொடுத்து இருந்தார். அவருடைய இந்த குறையை மாற்றிக் கொள்ளாமல் அவரை தொடர்ந்து போட்டிகளில் ஆட வைப்பது இந்திய அணிக்கு இது போன்ற 6 ரன் தோல்விகளையே பெற்றுத் தரும்.
ராகுல், இஷான் கிஷன் பேட்டிங் : அடுத்து 266 ரன்களை துரத்திய இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்தது. ரோஹித் ரன் எடுக்காமலும், திலக் வர்மா 5 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். 17 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்ந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் கே எல் ராகுல் படு நிதான ஆட்டத்துக்கு சென்று விட்டனர். 20வது ஓவர் வரை ரன் ரேட் வெறும் 4 என்ற அளவில் இருந்தது. கே எல் ராகுல் 39 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த இஷான் கிஷனும் பந்துகளை வீணடித்து 15 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் இறங்கிய இடம் : சூர்யகுமார் யாதவ்வை ஃபினிஷராக மட்டுமே பயன்படுத்துவோம் என பிடிவாதமாக இருந்த கேப்டன் ரோஹித், அவரை ஆறாம் இடத்தில் இறக்கினார். ஆனால், அவரை கோலி இறங்கும் மூன்றாம் நிலையில் பேட்டிங் ஆட வைத்திருக்க வேண்டும். அவர் ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க சிரமப்படுகிறார்.
அடுத்து உலகக்கோப்பை அணியிலும் இடம் பெற்று இருக்கிறார். அவருக்கு நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடும் வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும்.
ஃபினிஷர் என கேப்டன் கூறி விட்டதாலோ என்னவோ, அவர் முதலில் பந்துகளை வீணடித்தாலும், ஒரு கட்டத்திற்கு பின் ஸ்வீப் ஷாட் ஆடியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு முயன்று, உலகின் சிறந்த சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆனார். 36 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஜடேஜா ஃபார்ம் அவுட் : ஆல் ரவுண்டர் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் ரன் குவித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. அவர் பேட்டிங்கில் ஃபார்ம் அவுட் என்பதை இந்த நேரத்தில் அனைவரும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அவர் இந்தப் போட்டியில் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
காரணங்கள் : கேப்டன் ரோஹித் செய்த அணி மாற்றம், ரன்களை அதிகம் விட்டுக் கொடுத்த ஷர்துல் தாக்குர், தடுமாறிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ராகுல் மற்றும் இஷான் கிஷன், தான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவில்லாத சூர்யகுமார் யாதவ், ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ஜடேஜா ஆகியோர் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம்.