பெங்களூரு: லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் கேட்சை பிடித்த விராட் கோலி ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அப்போது கேமராவும் அனுஷ்கா சர்மா பக்கம் திரும்ப, ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்திற்கு சென்றது.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தீபக் ஹூடா 9 ரன்களிலும், க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் லக்னோ அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியை மீட்டெடுக்கும் பொறுப்பு ஸ்டாய்னிஸ் - கேஎல் ராகுல் தலையில் விழுந்தது. இதில் விக்கெட்டை காப்பாற்ற ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 43 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஹர்சல் படேல் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் சிக்சர், பவுண்டரி என்று விளாசிய ஸ்டாய்னிஸ் 17 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து கரண் சர்மா வீசிய 9வது ஓவரிலும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் ஷாபாஸ் அஹ்மத் பந்துவீச்சில் இரு சிக்சர்கள் உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் சேர்த்தது. அதுமட்டுமல்லாமல் 25 பந்துகளில் அரைசதம் கடந்து ஸ்டாய்னிஸ் அசத்தினார். ஆனால் கரண் சர்மா சுழலில் சிக்கி 65 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சிராஜ் வித்தியாசமான ஃபீல்டிங் செட் அப் வைத்து, கேஎல் ராகுல் 18 ரன்களில் வீழ்த்தினார். கேஎல் ராகுல் கொடுத்த கேட்ச்சை பிடித்த விராட் கோலி, ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு கேஎல் ராகுல் கொடுத்த கேட்ச்சை விராட் கோலி தவறவிட்டதால், அவர் சதம் விளாசி இருந்தார். ஆனால் இந்த முறை விராட் கோலி எளிதாக கேட்ச்சை பிடித்தார். இதுவே அவரது ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்தது. அப்போது ஸ்டாண்ட்ஸில் நின்றிருந்த அனுஷ்கா சர்மா பக்கம் கேமரா திருப்பப்பட்ட போது, அவர் எழுந்து நின்று கைகளை தட்டி விராட் கோலிக்கு உற்சாகம் கொடுத்தார்.