அகமதாபாத்: இந்திய அணியுடனான உலகக்கோப்பை போட்டியில் தோல்வியடைந்தால் கேப்டன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பதில் அளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அத்தனை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. இதனால் வரலாற்றை தக்க வைக்க இந்தியாவும், வரலாற்றை படைக்க பாகிஸ்தான் அணியும் வரிந்து கட்டவுள்ளன.
இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வென்றுள்ளதால், யார் வெற்றிபெறுவார்கள் என்ற விவாதமும் ரசிகர்களிடையே தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதில் கவனம் செலுத்த விரும்பவில்லை. அடுத்து வரும் போட்டியில் தான் எங்களின் கவனம் உள்ளது. சாதனைகள் படைக்கப்படுவதே உடைப்பதற்காக தான்.
அதனால் இந்தியாவின் இந்த சாதனையையும் நாங்கள் உடைப்போம். நாளைய ஆட்டத்தில் நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களே வெற்றிபெறுவார்கள். எங்கள் அணி வீரர்கள் நாளைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாங்கள் இவ்வளவு நாட்கள் எப்படி விளையாடினோமோ, அதனை நாளையும் செய்ய விரும்புகிறோம். அகமதாபாத் மைதானம் அளவில் மிகப்பெரிய மைதானம். லட்சக்கணக்கான ரசிகர்கள் வரவுள்ளார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் கேப்டன் பதவி பறிபோக வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதனைப் பற்றியெல்லாம் நான் யோசிப்பதில்லை. அதேபோல் இந்தப் போட்டியில் தான் என் கேப்டன்சி எதிர்காலம் இருப்பதாகவும் நான் நம்பவில்லை.
ஏதோ ஒரு போட்டியால் நான் கேப்டன்சியையும் பெறவில்லை. ஏதோ ஒரு போட்டியால் நான் கேப்டன்சியை இழக்கப் போவதுமில்லை. அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையில் விளையாடி வெற்றிபெற்றிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன் தான் களமிறங்குவோம். எங்களின் திட்டங்களை செயல்படுத்த இதனை ஒரு சிறந்த வாய்ப்பாகவே கருதுகிறேன். அழுத்தத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இந்தப் போட்டியை அணுகுவோம் என்று தெரிவித்துள்ளார்.