
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரண்டு டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பாண்டியா 4 விக்கெட்களையும்,ரோஹித் சர்மா சதம் அடித்தும் இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.
இப்போட்டியில் நிகழ்ந்த சில சாதனை நிகழ்வுகள்:

ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது மூன்றாவது சதமாகும். இச்சாதனையை புரிந்த இரண்டாவது வீரர் ரோஹித் ஆவார். இதே போல் 3 சதங்கள் அடித்த மற்றொரு வீரர் நியூஸிலாந்தின் கோலின் முன்றோ ஆவார்.
இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் ஆறாவது சர்வதேச டி20 தொடர் வெற்றி இதுவாகும்.
இந்த போட்டியில் ஹர்டிக் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களையும், அதிரடியாக பேட்டிங் செய்து 14 பந்துகளில் 33 ரன்களையும் குவித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இச்சாதனையை புரிந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தமாக இவர் எட்டாவது வீரர் ஆவார்.
சர்வதேச டி20 வரலாற்றில்,ஒரு போட்டியில் ஐந்து கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி. நேற்றைய போட்டியில் தோனி, இங்கிலாந்தின் 6 விக்கெட்கள் விழ காரணமாக இருந்தார் ( 5 கேட்ச்கள் மற்றும் ஒரு ரன் அவுட்). இதற்கு முன்னாள் ஆப்கானிஸ்தானின் முகமத் ஷாஷாத் மட்டுமே 5 விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர்.