ஆரம்பம் நல்லாத்தான் இருந்தது
இப்படித்தான் நேற்றும் முக்கியமான நேரத்தில் பொல்லார்டின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. வெறும் 24 பந்துகளில் 5 சிக்சர்கள், 1 பவுண்டரி உதவியோடு 50 ரன்னை குவித்தார் பொல்லார்ட். இதனால் இமாலய இலக்கான 231 ரன்களை நெருங்கியது மும்பை.
பொல்லார்டின் பெரும் தவறு
நினைத்து பார்க்க முடியாத சேஸிங் என்றபோதிலும், பொல்லார்ட் காட்டிய அதிரடியால், பஞ்சாப் அணி மரண பயத்தில் சிக்கியிருந்தது. ஆனால் கடைசி ஓவரில் பொல்லார்ட் செய்த ஒரு தவறு ஆட்டத்தை பஞ்சாப்புக்கு சாதகமாக மாற்றி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது.
ரன் ஓடவும் தெரியாதா?
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்ட், ஹர்பஜன்சிங் களத்தில் நின்றனர். முன்னாள் சிஎஸ்கே வீரரான மோகித் ஷர்மா பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் ஓடியபோதிலும், கிரீசில் பேட்டை வைக்காமல் பொல்லார்ட் ஓடியதால் 1 ரன்தான் கொடுக்கப்பட்டது.
சிக்ஸ் அடிச்சிட்டாருப்பா
2வது பந்தில் பொல்லார்ட் லெக்சைடில் ஒரு சிக்சர் விளாச, 4 பந்துகளில் 9 ரன்ள் எடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்தது மும்பை. ஆனால், அதன்பிறகுதான் மோகித்தின் மூளை வேலை செய்தது. சிறப்பான பந்து வீச்சை காண்பித்தார். ஆப்சைடில் லோ-ஃபுல்டாஸ் பந்தை மோகித் வீச அதை லாங்-ஆன் திசையில் அடித்தார் பொல்லார்ட். ஒரு ரன் எடுக்க அருமையான வாய்ப்பு இருந்தும்கூட, ஓடி வந்த ஹர்பஜனை திரும்ப போகச் சொல்லிவிட்டு அடுத்த பந்தையும் பொல்லார்ட்தான் சந்தித்தார்.
என்ன முக்கினாலும் நடக்கல
முந்தைய பந்தில் அடித்த சிக்சர், பொல்லார்டுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஓவர் கான்பிடென்ட்டாக போனதுதான் மும்பை அணியின் தோல்விக்கும் காரணமாக மாறியது. ஆம்.., அடுத்த பந்தை மோகித் ஆப்சைடில் யார்க்கராக வீச, அதை நேராக பவுலரிடமே அடித்து ரன் ஓட முடியாமல் நின்றார் பொல்லார்ட். கடைசி இரு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்த பந்தை பொல்லார்ட் தொடக்கூட முடியவில்லை. அது கீப்பரிடம் தஞ்சமடைந்தது. கடைசி பந்தில் 9 ரன் என்ற நிலைக்கு மும்பை தள்ளப்பட்டது. பஞ்சாப் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கடைசி பந்தில் சிங்கிள் மட்டுமே எடுத்தார் பொல்லார்ட்.
ஒரு சிங்கிள்
ஹர்பஜன் பல போட்டிகளில் அதிரடியாக ஆடி தனது அணியை வெற்றிபெறச் செய்தவர். பவர்-ஹிட்டர். எனவே பொல்லார்ட் மட்டும், 3வது பந்தில் சிங்கிள் அடித்திருந்தால் ஹர்பஜன் அடுத்த பந்தில் பவுண்டரியோ அல்லது சிங்கிளோ கூட அடித்திருக்க வாய்ப்பு இருந்தது. இது மனதளவில் பவுலருக்கு பலவீனத்தை கொடுத்திருக்கும். பேட்ஸ்மேன் சிங்கிள் ஓடவில்லை என்பது பவுலருக்கு மன ரீதியில் பலத்தைதான் கொடுத்தது. எனவேதான் அனைத்து பந்துகளையும் வீண் செய்து மும்பையை தோல்வியடையச் செய்துவிட்டார் பொல்லார்ட்.