
சிஎஸ்கேவின் நிலைமை
மெகா ஏலத்தின் போது 2வது சுற்றில் கூட சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை. அவரின் ஃபார்ம் சரியில்லை எனக்கூறி மற்ற எந்த அணிகளும் அவரை வாங்காததால், கடந்த ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். எனினும் சமீபத்தில் அவரின் பயிற்சி வீடியோ வெளியானதால் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் கம்பேக் கொடுப்பதற்காக தயாராகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திடீர் அறிவிப்பு
இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது, ஐபிஎல் தொடர் உட்பட இந்தியாவின் அனைத்து உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனது முடிவை உத்தரபிரதேச வாரியத்திற்கும் பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷாவுக்கும் தெரிவித்துவிட்டேன். தற்போது அயல்நாட்டு தொடர்களில் விளையாட எனக்கு முழு சுதந்திரமும் உள்ளது எனக் கூறினார்.

ஐபிஎல் விதிமுறை
இந்தியாவில் இருந்து ஒரு வீரர் அயல்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டுமென்றால், இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் முழுமையாக ஓய்வு பெற வேண்டும். அந்தவகையில் சுரேஷ் ரெய்னா, இனி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்களில் விளையாடவுள்ளார்.

ஐபிஎல் ரெக்கார்ட்கள்
ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஜாம்பவானாக ரெய்னா திகழ்கிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 200 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரெய்னா 5,528 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications