
சச்சினின் கதை
பிளேயிட் இட் மை வே என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த நூல் படு பரபரப்பாக விற்று வருகிறது. காரணம், சச்சின் பரபரப்பான பல புகார்களை புத்தகத்தில் குவித்து வைத்திருப்பதால்.

கபில் தேவ் மீது கடுப்பு
இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான, இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவரான, பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சீறும் சிங்கமாக திகழ்ந்தவரான, தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடியவருமான, இந்தியாவின் அருமையான கேப்டன்களில் ஒருவருமான கபில் தேவ் மீதும் இந்தப் புத்தகத்தில் பாய்ந்திருந்தார் சச்சின்.

பயிற்சியாளர் வேலை தெரியவில்லையாம்
கபில் தேவ் பயிற்சியாளராக இருந்தபோது கேப்டனாக இருந்தவர் சச்சின். ஆனால் சச்சினின் சொதப்பல் கேப்டன்ஷிப்பால் இந்திய அணி பெரிய பெரிய தோல்விகளைச் சந்தித்து வந்தது. ஆனால் கபில்தேவ் நல்ல பயிற்சியளராக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் சச்சின். கபிலுக்கு பயிற்சியாளர் வேலை சரியாக செய்யத் தெரியவில்லை. அவரது வேலையையும் நானே பார்க்க நேரிட்டது என்று கூறியுள்ளார் சச்சின்.

இது அவர் கருத்துங்க
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கபிலிடம் கேட்டபோது, இது அவரது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அனைவரது கருத்தையும் நான் மதிக்கிறேன்.

வாழ்த்துகள் சச்சின்!
சச்சினின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி நிறுத்திக் கொண்டார் கபில்.

விளையாடினால் ஜெயிக்கலாம்
இந்தியா உலகக் கோப்பையை தக்க வைக்குமா என்ற கேள்விக்கு, இப்பவே அதைச் சொல்ல முடியாது. எனது நாட்டு வீரர்களுக்கு நான் வாழ்த்து கூறிக் கொள்கிறேன். நன்றாக ஆடினால், நல்ல கிரிக்கெட்டைக் கொடுத்தால் வெல்லலாம் என்றார் கபில்தேவ்.


Click it and Unblock the Notifications