
பெவுமா அவுட்
டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரை வழக்கம் போல் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 1 ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பெவுமா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குயின்டன் டி காக் மற்றும் ரூசோவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

கேட்ச் தவறியது
பவர்பிளேவில் அஸ்வினை அழைத்து ரோகித் சர்மா பந்துவீச கூறினார். அந்த ஓவரில் அஸ்வின் ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்களை விட்டு கொடுத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்சர் அல்லது ஒரு பவுண்டரியை தென்னாப்பிரிக்க வீரர்கள் அடித்தனர். ஆட்டத்தின் 9வது ஓவரில் கடைசி பந்தில் ரூசோவ் கொடுத்த கேட்சை முகமது சிராஜ் தவறவிட, அது சிக்சராக மாறியது.

அதிரடி சதம்
குயின்டன் டிகாக் 43 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் ருசோவ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் பறக்கவிட்டார். இதில் ரூசோவ் 48 பந்துகளில் சதம் விளாசினார். ஸ்டப்ஸ் தன் பங்கிற்கு 23 ரன்கள் சேர்த்தார். இந்திய வீரர்கள் மோசமான பந்துவீச்சு, இந்த இன்னிங்சிலும் தொடர்ந்தது.

மோசமான பந்துவீச்சு
முகமது சிராஜ் 17 வது ஓவரில் மட்டும் சிறப்பாக பந்துவீசி 7 ரன்களை மட்டும் விட்டு கொடுத்தார். அதன் பிறகு, 3 ஓவர்களும் ரன்கள் பறந்தன. 18வது ஓவரில் 15 ரன்களும், 19வது ஓவரில் 11 ரன்களும், தீபக் சாஹர் வீசிய கடைசி ஓவரில் 24 ரன்களும் அடிக்கப்பட்டது. இதனால் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் அடிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











