டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது கடைசி 6 பந்துகளில் 23 ரன்களை ரிங்கு சிங் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களில் சூழலுக்கு தகுந்தாற் போல் டி20 கிரிக்கெட்டை விளையாடும் வீரர்களில் முதன்மையானவர் ரிங்கு சிங். அதிலும் சேஸிங்கின் போது தேவையின்றி பேட்டை சுழற்றக் கூடாது என்ற கிரிக்கெட்டின் அடிப்படையை சரியாக பின்பற்றுபவர். சிறிய வயதிலேயே டி20 கிரிக்கெட்டை புரிந்து கொண்டு கடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்களை குவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை கொல்கத்தா அணிக்காக களமிறங்கும் போதும், தத்தளித்துக் கொண்டிருக்கும் அணியை மீட்கும் பணியையே ரிங்கு சிங் செய்து செல்வார். அப்படி தத்தளித்து கொண்டிருக்கும் நேரத்தில், கடைசி இரு ஓவர்களில் விஸ்வரூபம் எடுப்பார் ரிங்கு சிங். எப்படி தோனி கடைசி நேரத்தில் இறங்கி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் எளிதாக மாற்றுவாரோ, அதே தாக்கத்தை 25 வயதிலேயே செய்து வருகிறார் ரிங்கு சிங்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது 18 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. ரிங்கு சிங் 15 பந்துகளில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் ரிங்கு சிங். இதையடுத்து கடைசி ஓவரின் 4வது பந்தில் வாய்ப்பு கிடைக்க, அந்த பந்திலும் சிக்சரை விளாசினார் ரிங்கு சிங்.
மொத்தமாக 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 21 பந்துகளில் 38 ரன்களை விளாசி தள்ளினார் ரிங்கு சிங். அதாவது ரிங்கு சிங் எதிர்கொண்ட கடைசி 6 பந்தில் 23 ரன்களை சேர்த்து அசத்தி இருக்கிறார் ரிங்கு சிங். கண்ணை மூடி திறக்கும் போதில் தோனியை போல் தரமான சம்பவத்தை நிகழ்த்தி காட்டினார் ரிங்கு சிங். ஆட்டத்தை மாற்றிய இன்னிங்ஸை ஆடிய ரிங்கு சிங்கிற்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரிங்கு சிங் இந்தியில் பேச அதனை கேப்டன் பும்ரா ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தார். அதில், ஐபிஎல் தொடரின் போது என்ன செய்தேனோ, அதை தான் மீண்டும் செய்வதற்கு முயற்சித்தேன். கடைசி இரு ஓவர்கள் வரை பதற்றம் கொள்ளாமல் அமைதியாக இருக்க முயற்சித்தேன். நான் என் கேப்டன் என்ன சொல்கிறார் என்பதையும் கவனித்தேன். கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடி வருகிறேன். எனது முதல் இன்னிங்ஸில் ஆட்டநாயகன் விருது வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.