ரியோ டி ஜெனீரோ: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒலிம்பிக் கிராமத்திற்கு திடீரென வருகை தந்தது இந்திய குழுவினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்ததது. ஒலிம்பிக்கின் பிராண்ட் அம்பாசடராக செயல்படுகிறார் சச்சின் என்பது நினைவிருக்கலாம்.
சச்சின் வருகையால் இந்திய தரப்பு பெரும் உற்சாகமடைந்தது. இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பேசிய சச்சின் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.
ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த சச்சினை, இந்தியக் குழுவின் தலைவரான ராகேஷ் குப்தா வரவேற்று அழைத்துச் சென்றார். வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்கு நடந்தே சென்றார் சச்சின். ஒவ்வொரு வீரரையும் சச்சின் சந்தித்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
அவர்களிடையே சச்சின் பேசுகையில், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துகளை சுமந்து வந்துள்ளேன். உங்களுக்கு லெக்சர் கொடுக்க நான் வரவில்லை. நீங்கள் உங்களது விளையாட்டில் சிறந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். மிகக் கடுமையாக உழைத்து இந்த இடத்தை அடைந்துள்ளீர்கள். நாடே உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்பதே நாட்டு மக்களைப் போல எனது ஆசையும் கூட என்றார் சச்சின்.
மேலும் அவர் கூறுகையில், கடினமான உழைப்பே பலன் தரும் என்பதை நான் அனுபவித்துள்ளேன். அதுவே உங்களுக்கும். உங்களது சிறந்த உழைப்பும், கடும் உழைப்பும் நிச்சயம் உங்களுக்குப் பலன் தரும். பதக்கங்களை பற்றி மட்டும் நினைத்து விளையாட வேண்டாம். உங்களது சிறப்பான விளையாட்டைக் கொடுங்கள். மற்றவை உங்களைத் தேடி வரும். அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார் சச்சின்.
This makes my day. A perfect selfie with @sachin_rt pic.twitter.com/hGQ3UsivLJ
— Dutee Chand (@DuteeChand) August 6, 2016
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் சச்சின் அங்கு செலவிட்டார். அவருடன் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பேசினர். வீரர்களுடன் சச்சின் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் சச்சின் வருகை புத்துணர்ச்சியைக் கொடுத்தது என்பது அவர்களது முகங்களைப் பார்த்தபோதே தெரிந்தது.