
டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி
ஐபிஎல் 2021 தொடர் துவங்கி நேற்றைய தினம் இரண்டாவது போட்டி நடந்து முடிந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

பார்ட்னர்ஷிப்பில் 138 ரன்கள்
அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா துவக்கம் முதலே அதிரடி காட்டி பார்ட்னர்ஷிப்பில் 138 ரன்களை குவித்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க சிஎஸ்கே பௌலர்கள் பிரம்மபிரயத்தனம் செய்தும் முடியாமல் திணறினர்.

நெருக்கடி இல்லாத போட்டி
இந்நிலையில் அவர்கள் இருவரும் அணிக்கு அளித்த சிறப்பான துவக்கமே நெருக்கடி இல்லாமல் போட்டியை வெற்றி கொள்ள உதவியதாக அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டர் குறித்து தான் நெருக்கடியாக உணர்ந்ததாகவும் ஆனால் ஆவேஷ் உள்ளிட்ட பௌலர்கள் வெற்றியை சிறப்பாக சாத்தியப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பாக பயன்படுத்த திட்டம்
நார்ட்ஜே மற்றும் ரபடா ஆகியோர் குவாரன்டைனில் உள்ள நிலையில், அணியில் உள்ள வீரர்களை சிறப்பாக பயன்படுத்த தான் கருதியதாகவும் ரன் ரேட் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் ஒரு ஓவருக்கு முன்னதாக ஆட்டத்தை முடிக்க நினைத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறப்பான அனுபவம்
மேலும் தனது மனதுக்கு நெருக்கமான சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியுடன் இணைந்து டாசிற்காக நடந்து சென்றது சிறப்பான அனுபவம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அவரிடம் இருந்து தான் அதிகமாக கற்றுள்ளதாகவும் ரிஷப் தெரிவித்துள்ளார். போட்டியில் வெற்றி கொண்டது அனைத்தையும் விட சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications