மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், காயம் காரணமாக வரவிருக்கும் 2025 ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போதுதான் பண்ட்டுக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது, பந்து நேராக ரிஷப் பண்ட்டின் கால் விரலைப் பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தில் இருந்து மருத்துவக் குழுவினரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், தனது வலியைப் பொருட்படுத்தாமல், அடுத்த நாள் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ரிஷப் பண்ட், அரைசதம் அடித்து அணியின் ஸ்கோருக்கு உதவியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவரது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் காயம் காரணமாக ரிஷப் பண்ட்டிற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இருப்பினும், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய அவருக்குக் குறைந்தது ஆறு வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை T20 தொடர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் மற்றும் த்ருவ் ஜுரெல் போன்ற வீரர்கள் விக்கெட் கீப்பர்களாக இருப்பதால், ஆசிய கோப்பையில் ரிஷப் பண்ட்டின் இழப்பு பெரி சென்னை கிராண்ட்மாஸ்டர் ஓபன்.. அர்ஜுன், வின்சென்ட் அசத்தல்! இன்றைய போட்டிகள் யாருடன்?ய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாகவும், அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு முக்கிய வீரராகவும் அவர் திகழ்ந்து வந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட, காயமடைவதற்கு முன்பு வரை 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 479 ரன்கள் குவித்து அபாரமான ஃபார்மில் இருந்தார். எனவே, டெஸ்ட் தொடரில் அவரது இழப்பு இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அவரது இடத்தில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட இளம் வீரர் த்ருவ் ஜுரெல், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விக்கெட் கீப்பராகத் தொடர அதிக வாய்ப்புள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்த நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.