டெல்லி: ரிஷப் பந்த், சாம்சன் அதிரடியால் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 42வது லீக் போட்டியில், குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுமித் (9), மெக்கல்லம் (1) ரன்களுக்கு அவுட்டாகினர். 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா, தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் விளாசினர். ரெய்னா 43 பந்தில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி அடித்து 77 ரன்களும், கார்த்திக் 34 பந்தில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 65 ரன்களும் குவித்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது குஜராத். டெல்லி அணியில் ரபாடா, கம்மிங் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
இதனையடுத்து 209 ரன்கள் என்ற இமால இலக்கை விரட்டி டெல்லி அணி களமிறங்கியது. துவக்க வீரரான சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார், இவருடன் களமிறங்கிய கே.கே. நாயர் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார், பின்னர் வந்த ரிஷப் பந்த் அதிரிடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். அவர் 43 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உள்பட 97 ரன்களில் ஆட்டமிழந்து 3 ரன்களில் சதத்தை நழுவ விட்டார்.
இவரைத் தொடர்ந்து ஆன்டெர்சன் 18 ரன்களுடனும் எஸ்.எஸ் ஐயர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 17.3 ஓவர்களில் 214 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.