எப்படி வென்றது இந்தியா
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணம் ரிஷப் பண்ட்-ன் சதமாகும். டாப் ஆர்டர் சொதப்பல் காரணமாக இந்திய அணி 72 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்தது. இதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தேடிக்கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களும் அடித்தனர்.
சாதனை மேல் சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். மேலும் SENA நாடுகளில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் ரிஷப் பண்ட்-க்கே வந்துள்ளது. இதுநாள் வரை தோனி மெல்பேர்னில் அடித்த 83 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது.
ரிஷப் பண்ட் விளக்கம்
இந்நிலையில் டாப் ஆர்டர் வீரர்களே சொதப்பிய போது, தான் மட்டும் சதமடித்தது எப்படி என பண்ட் விளக்கியுள்ளார். அதில், இந்த இன்னிங்ஸை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன். நான் ஒவ்வொரு ஓவரிலும் என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அந்தந்த பந்தை மட்டும் கவனம் செலுத்தி அதை அடிக்க முடியுமா என கணித்து தான் அடித்தேன்.
எனக்கு அதுதான் பிடிக்கும்
இக்கட்டான சூழலில் அணி இருக்கும் போது, நாம் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், பந்திற்கு பந்து மட்டும் பார்த்து ஆடினால் சாதித்துவிடலாம். இங்கிலாந்து களங்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அங்குள்ள சூழலில் மிகவும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்யலாம். நிறைய போட்டிகளில் விளையாட விளையாட அனுபவங்களும் அதிகரித்துக்கொண்டே வரும் என பண்ட் கூறினார்.