ஜாம்பவான் வீரர்கள்
90களிலும், 2000மாவது ஆண்டிலும் கிரிக்கெட்டில் கோலோச்சி வந்த ஐந்து நாடுகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தான் சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர். ஓய்வு பெற்று விட்ட ஜாம்பவான் வீரர்களை மீண்டும் களத்துக்கு கொண்டு வரும் திட்டம் தான் இது.
சச்சின் டெண்டுல்கர், சேவாக்
தங்களின் ஆதர்ச கிரிக்கெட் ஹீரோக்கள் மீண்டும் கிரிக்கெட் ஆடினால் எப்படி இருக்கும்? என்ற ரசிகர்களின் ஆவலை வைத்து திட்டமிடப்பட்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஆடுகின்றனர்.
ஆர்வம்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரையன் லாரா, ஷிவ்நரைன் சந்தர்பால் உள்ளிட்ட வீரர்களும், இலங்கை அணியில் முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்கின்றனர். அதனால், ரசிகர்கள் இந்தப் போட்டியைக் ஆவலுடன் கண்டு வந்தனர்.
இந்தியா வெற்றி
இந்தியா லெஜண்ட்ஸ் அணி இரண்டு போட்டிகளில் ஆடி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் போட்டியின் அடுத்தகட்டம் புனே நகரில் நடைபெற இருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம்
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது மேலும், பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. மக்கள் அதிகம் வெளியே கூட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
நிகழ்ச்சிகள் ரத்து
பொது நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாம்பவான் வீரர்கள் ஆடும் போட்டிகளுக்கு மைதானம் முழுவதும் நிரம்பி வழியும் அளவுக்கு கூட்டம் வந்த நிலையில், அதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்தது.
இட மாற்றம்
அதை உணர்ந்த போட்டி நிர்வாகிகள் அவரச கூட்டம் கூட்டி, போட்டிகளை புனேவுக்கு மாற்றாமல், மும்பை டிஒய் பாட்டில் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்தனர். மேலும், ரசிகர்கள் இல்லாத அரங்கங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
சச்சின், சேவாக், யுவராஜ் சிங், பிரையன் லாரா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தை நேரில் காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டிக்கெட் வாங்கி வைத்திருந்தவர்களுக்கும் இது ஏமாற்றம் அளித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
ஆனால், மக்களின் பாதுகாப்பை கருதியே இந்த அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது தொடர் நிர்வாகம். இந்த சிறிய தொடருக்கே இந்த கதி என்றால் ஐபிஎல்-லுக்கு என்ன ஆகும்? என்பதே தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.