மும்பை: சமீபத்தில் ராபின் உத்தப்பா விராட் கோலி மீது சரமாரியாக சில புகார்களை முன் வைத்து இருந்தார். குறிப்பாக யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்தது விராட் கோலி தான் என அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.
யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில் அவரது நுரையீரல் போதுமான அளவுக்கு வேலை செய்யவில்லை என்று கூறி அப்போதைய கேப்டன் விராட் கோலி அவரை அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டதாக ராபின் உத்தப்பா கூறி இருந்தார்.

இது உண்மைதானா? யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வை கேப்டனாக இருந்தபோது விராட் கோலி முடிவுக்கு கொண்டு வந்தாரா? என்ற கேள்விகள் இருந்தன. கோலி ரசிகர்கள் ராபின் உத்தப்பா பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யுவராஜ் சிங் அளித்த பேட்டி ஒன்றை பகிர்ந்து வருகின்றனர் பிற ரசிகர்கள்.
அதில் ராபின் உத்தப்பா கூறியதை போலவே யுவராஜ் சிங் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் வந்த போது யோ - யோ தேர்வில் பங்கேற்க வேண்டும் எனவும், உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் எனவும் இந்திய அணி நிர்வாகம் அவரை வலியுறுத்தியது தெரிய வந்துள்ளது.
அந்த பேட்டியில் யுவராஜ் சிங் கூறி இருப்பதாவது - "2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நான் எட்டு - ஒன்பது போட்டிகளில் விளையாடினேன். அதில் இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்றேன். அதன் பின்னர் அணியிலிருந்து நீக்குவார்கள் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை."
"நான் காயம் அடைந்து இருந்தேன். அப்போது இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன் தயாராகுமாறு கூறினார்கள். திடீரென யோ - யோ தேர்வு முன்வைக்கப்பட்டது. அது எனது அணித் தேர்வில் மிகப்பெரிய திருப்பமாக இருந்தது. அதனால் நான் மீண்டும் சென்று யோ - யோ தேர்வுக்காக 36 வயதில் பயிற்சி செய்தேன்."
"நான் அந்த யோ - யோ தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு கூறினார்கள். நான் இத்தனை வயதில் யோ - யோ தேர்வை கடப்பேன் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் என்னை அடுத்து உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறினார்கள்." இவ்வாறு யுவராஜ் சிங் அதில் பேசி இருக்கிறார்.
உங்க நுரையீரல் சரியாக வேலை செய்யவில்லை.. யுவராஜை அணியை விட்டு நீக்கிய கோலி.. உத்தப்பா உடைத்த ரகசியம்
யுவராஜ் சிங்கை அணியில் தேர்வு செய்யக் கூடாது என்பதற்காக வரிசையாக தடைகளை ஏற்படுத்தியது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் பின் எப்போதும் யுவராஜ் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.