உலக கோப்பை காலிறுதி.. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. வங்கதேசத்தை விரட்டியடித்த ரோகித் ஷர்மா சதங்கள்
லண்டன்: கடந்த உலக கோப்பை காலிறுதியில் வங்கதேசத்தை உதைத்து விரட்ட காரணமாக இருந்த ரோகித் ஷர்மா, இப்போது மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியிலும் அதையே செய்துள்ளார்.
2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலக கோப்பையை நடத்தின. அந்த தொடரின் காலிறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதின.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 302 ரன்கள் விளாசியது. அப்போட்டிில் 137 ரன்களை விளாசினார் ரோகித் ஷர்மா.

சர்ச்சை
ரோகித் ஷர்மா 90 ரன்கள் விளாசியபோது அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை நோபால் என பாகிஸ்தானை சேர்ந்த அலீம் தார் அறிவித்தார். பவுலர் ருபெல் ஹொசைன் வீசிய அந்த பந்து ரோகித் ஷர்மா இடுப்பு உயரத்தை விட உயரமான ஃபுல்டாசாக வீசப்பட்டது என்பதால் நோபால் அறிவிக்கப்பட்டது. ஆனால் டிவி ரிப்ளேகளில் அது இடுப்பை விட உயரம் குறைந்த ஃபுல்டாஸ் என தெரிந்தது.

இந்தியா வெற்றி
இந்த போட்டியில் வங்கதேசம் 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரோகித் ஷர்மா சதம் விளாசியதை போல இன்றைய மினி உலக கோப்பை அரையிறுதியிலும் சதம் விளாசியுள்ளார். இதிலும் வங்கதேசம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சதங்கள்
இதன் மூலம், ரோகித் சர்வதேச அரங்கில் இரு இரட்டை சதங்கள் உட்பட 11 சதங்கள் விளாசியுள்ளார். அதில் 2 சதங்கள் வங்கதேசத்துக்கு எதிரானவை. அந்த இரண்டும் எவை என்பதைத்தான் மேலே நீங்கள் படித்தீர்கள். முக்கிய கட்டத்தில் வங்கதேசத்தை விரட்டியடிக்க அவரது சதங்கள் பயன்பட்டுள்ளன.

கியர் மாற்றம்
இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் நல்ல பந்துகளில் ரன் அடிக்காமலும், எளிதான பந்துகளை விரட்டியும் புத்திசாலித்தனமாக ஆடினார். பிறகு கியரை மாற்றி விளாசலை ஆரம்பித்தார் ரோகித் ஷர்மா.


Click it and Unblock the Notifications