மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் இரண்டு அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினும் ஓய்வு பெற்றார். இவ்வாறாக மூன்று அனுபவ வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில் 5 இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
இந்த பட்டியலில் முதல் வீரராக சுப்மன் கில் இருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளில் சராசரியாகவே பேட்டிங் செய்து வந்தாலும், அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவரே அடுத்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1893 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 35 ஆக உள்ளது. அவர் தனது பேட்டிங்கை மேலும் வலுப்படுத்துவார் என பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளது. அவர் சிறப்பாக ஆடினால் நிச்சயமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்ப முடியும்.

அடுத்து தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவர் இந்திய டெஸ்ட் அணியின் வருங்கால நட்சத்திர வீரராகப் பார்க்கப்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 44 என்ற பேட்டிங் சராசரியும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 80 என்ற பேட்டிங் சராசரியும் வைத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் அபாரமாக விளையாடி இருந்தார். எனவே, அவர் டெஸ்ட் அணியில் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார், அதிக ரன்கள் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள துருவ் ஜுரல் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் 24 வயது ஆகும் நிலையில், மிடில் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேனாக நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வருகிறார். ரிஷப் பண்ட்டை முந்தி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அப்படி இல்லை என்றாலும், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் நீண்ட காலம் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.
அடுத்து சாய் சுதர்சன். அவர் இன்னும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறவில்லை. ஆனாலும், அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவரது பேட்டிங் ஸ்டைல் என்பது மிகவும் சிறப்பானதாகவும், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களின் நுணுக்கங்களை பின்பற்றியும் அமைந்துள்ளது. எனவே, அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இது போன்ற நிலையாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் நீண்ட காலம் அணியில் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில், சாய் சுதர்சனுக்கு சில போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர் தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்து சர்பராஸ் கான். அவர் இதுவரை தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஒரு விமர்சனம் உள்ளது. சில போட்டிகளில் அதிரடியாக விளையாடும் அவர், சில போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்கிறார். அதிரடியாக ஆட வேண்டும் என்ற மனநிலையில் தனது விக்கெட்டைப் பறிகொடுக்கிறார். இந்த விஷயத்தை மட்டும் அவர் திருத்திக் கொண்டால், இந்திய அணியில் நிலையான பேட்ஸ்மேனாக மாற வாய்ப்புள்ளது. அவர் உள்ளூர் போட்டிகளில் 70 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அதேபோல இந்திய அணிக்காகவும் பெரிய பேட்டிங் சராசரியுடன் அவர் நீண்ட காலம் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.