மும்பை: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் அந்தப் போட்டிகளை பார்த்து மூழ்கி இருந்த நேரத்தில் திடீரென்று ரோஹித் சர்மாவிடமிருந்து ஒரு அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியானது. 38 வயதை அண்மையில் நிறைவு செய்த ரோகித் சர்மா, இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருக்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் இந்திய அணியில் தேர்வு குழு தலைவர் ஆன அஜித் அகார்கர் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரம் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்திருந்தனர். மேலும் ரோகித் சர்மாவை முதல் சில போட்டிகளில் சேர்த்து அதில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அணியை விட்டு நீக்க முடிவெடுத்திருந்தார்கள்.
இது குறித்து ரோகித் சர்மாவிடம் தெளிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித்ழ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த கேப்டன் பும்ராவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் பும்ராவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால், அவரை கேப்டன் பதவியில் நியமிப்பது சரியான முடிவு கிடையாது என்று தேர்வு குழு முடிவு எடுத்தது.
இதனால் அடுத்த கேப்டன் பதவியில் பும்ராவும் கிடையாது. இதனையடுத்து சுப்மன் கில், இந்தியன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கில் ஏற்கனவே ஒரு நாள் அணியில் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.