கம்பீரின் செய்கையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்.. லார்ட்ஸ் பால்கனியில் நடந்த சம்பவம்
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்த சைகையைக் கண்டு ரோஹித் சர்மா விழுந்து விழுந்து சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க பயிற்சியாளர் கம்பீர் முயற்சித்து வருவதாகவும், லார்ட்ஸ் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேச போட்டி எனவும் செய்திகள் வெளியான நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து தொடருடன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் நீக்கப்படலாம் என்றும், அவருக்கும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவுவதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இந்த வதந்திகளை மறுத்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, தேர்வு குழுவினரின் திட்டங்களில் இருக்கும் வரை ரோஹித் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்றுகொண்டு கௌதம் கம்பீர் கைகளால் சில சைகைகளைச் செய்ய, அதைப் பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் உதவி பயிற்சியாளர்கள் குலுங்கி குலுங்கிச் சிரித்தனர்.
இந்த வீடியோ மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்பதும், அணிக்குள் சுமுகமான சூழல் நிலவுவது போலவும் ஒரு எண்ணம் எழுந்துள்ளது. சமீபகாலமாக ரோஹித்தின் பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. கடந்த 8 இன்னிங்ஸ்களில் அவர் 30.12 சராசரியுடன் 241 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் அவர் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறினார்.
இதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன்பாக அவரை நீக்க தேர்வுக் குழுவினர் விரும்பினாலும், ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடரவே ஆசைப்படுகிறார். லார்ட்ஸ் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி தனது ஃபார்மை நிரூபிப்பாரா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
